அண்மையில் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுலா சென்று வந்தேன். தமிழகத்தில்தான் எத்தனை இடங்கள் உள்ளன, சுற்றிப் பார்ப்பதற்கு!கோவில்கள், சரித்திரப் புகழ் பெற்ற இடங்கள், கடற்கரைகள், மலை வாழிடங்கள், அருவிகள், அணைக்கட்டுகள், என எண்ணற்ற இடங்கள்,. ஆனால் நான் பார்த்த பெரும்பாலான இடங்களில், தாம்பூலம் தரிக்கும்போது ஒரு சிறுகல் வாயில் அகப்பட்டு உறுத்துவது போல, ஒரு விஷயம் என்னை அரிக்கத் தொடங்கிவிட்டது.
எங்கெங்கு காணினும் குப்பைகளும், அசுத்தங்களும் கிடக்கின்றன. நிறைந்து வழிந்து கொண்டும், நிறையாத போதும் சிதறிய குப்பைகள் சூழ்ந்தும் நிற்கும் குப்பைத்தொட்டிகள்,சேறும் சகதியும் விரவிக் கிடக்கும் தெருவோரங்கள்,மனித , விலங்குக் கழிவுகள் புதைந்து கிடக்கும் கடற்கரை மணல்வெளிகள், வெற்றிலைச் சாறும், உடைந்து முறிந்த சிகரெட் துண்டுகளும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களைக் கொண்டிருந்து, குறுக்கே கிழிக்கபட்ட உறைகளும் , வாடிய பூச்சரங்களும், தண்ணீர், குளிர்பானப் போத்தல்களும் , தின்பண்ட உறைகளும், பயன்படுத்தித் தூக்கி எறியும் குவளை, தட்டு, வட்டில் வகையறாக்களும், எங்கெங்கும் பொங்கிக் கிடக்கும் சாலைகள், பூங்காக்கள், கோவில் கோட்டை வாசல்கள், கடை வீதிகள்.........
.வீடுகளடர்ந்த தெருவில் எங்கள் வண்டி போய்க் கொண்டிருந்தது. திறந்திருந்த ஒரு சில வீடுகளில் காண முடிந்த போது உள்ளே வழுவழு பளபள தரைகளும், மர, இரும்பு நாற்காலி மற்றும் மேசை போன்ற பொருள்களும் , வாகனாதி வசதிகளும் பளீரெனத் தெரிந்தாலும் , அந்த வீட்டுச் சுற்றுச் சுவருக்கும் வீதிக்கும் இடைப்பட்ட பகுதி, அடுத்த வீட்டுக்கும் இடைப்பட்ட பகுதி, வீட்டின் பின் பகுதி போன்றவை அழுக்கும் , அசுத்தமும், குப்பை கூளங்களும் நிறைந்து கிடப்பதைப் பார்த்தேன்.
மனிதனின் புறத்தோற்றம் பகட்டாக இருந்தாலும் அகத்தில் ஆயிரம் அழுக்குகள் நிரம்பியிருக்கின்றன.ஆனால், அவனது இல்லங்களிலோ, அகத்தில் சுத்தம் இருக்கிறது, புறமோ நாறுகிறது, என்ன ஒரு முரண் நகை இது?

Comments

  1. உங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .. சற்று எழுத்தின் உருவத்தைக் குறைக்கவும் . படிப்பதற்கு கடினமாக உள்ளது . புரிதலுக்கு நன்றி

    ReplyDelete
  2. அடுத்த இடுகையில் குறைத்துக் கொள்கிறேன்! ஆலோசனைக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி