Posts

Showing posts from 2022

நமக்கும் ட்ராஃபிக் சென்ஸுக்கும் ஏன் இத்தனை தூரம்...?

 போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க தனியாக கோச்சிங் கிளாஸ் எல்லாம் போக வேண்டாம்.... கோர்ஸும் படிக்க வேண்டாம்.... அடிப்படையான அறிவு இருந்தாலே போதும்....! ஆனாலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு ஏனோ ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவதில் அத்தனை சோம்பேறித்தனம்......!  குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் இடைவேளையில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குப் பயணித்தாலே கீழ்க்காணும்  பட்டியலில் உள்ள பல நான்சென்ஸ்களைப் பார்க்க முடியும்.  * இண்டிகேட்டர் போடாமல் சடாரெனத் திரும்பிப் பதைபதைக்க வைப்பது • போட்ட  இன்டிகேட்டர்  கதறுவது கூடக் கேட்காமல் ஆஃப் பண்ணாமலேயே ஒரு தியான நிலையில் ஓட்டி எங்கு திரும்பப்போகிறார்களோ என சஸ்பென்ஸ் வைப்பது •  லெஃப்ட் இன்டிகேட்டரைப் போட்டுவிட்டு ரைட்டில் திரும்பி சர்ப்ரைஸ் கொடுப்பது •   நான்கு வழிச்சாலையின் வலப்புற டிராக்கில் சாவகாசமாக ஓட்டிக் கடுப்பேற்றுவது •    தலை போகிற அவசரம் போல இரண்டு டூவீலர்களில் பேசிக்கொண்டே பேரலலாக ஓட்டுவது  •    சாலையின் விளிம்புக் கோட்டைத் தாண்டி வெளியே நிறுத்தாமல் பாதி வாகனம் சாலையில் நீட்டிக் கொண்டிருப்பது போல நிறுத்தி விட்டுச் செல்வது •    ஆளே இல்லாத சாலையிலும்  ஐந்

பாராட்டுகள் -பாராட்டுக்கள் , எது சரி....?

 பாராட்டுகள் -பாராட்டுக்கள் வாழ்த்துகள் -வாழ்த்துக்கள்  எது சரி....?  பொதுவாக, கள் என்பது இரண்டு வழிகளில் பொருள்படும்.  கள் என்பது மதுவையும் குறிக்கும், பன்மையைக் குறிக்கும் விகுதியாகவும் வரும்.   மரங்கள், செடிகள், கடல்கள், கண்கள், காய்கள், நாற்காலிகள், பறவைகள் - இங்கெல்லாம் கள் என்பது பன்மையைக் குறிக்கும் விகுதி; தனியே பொருள் தராது; தனிச் சொல்லும் அன்று.   தென்னங்கள்  பனங்கள்   அரிசிக்கள்  நாட்டுக்கள்   இங்கெல்லாம் கள் என்பது மதுவின் ஒரு வகை. தென்னையில் இருந்து, பனையிலிருந்து எடுக்கப்பட்ட கள்.  அரிசிலியிருந்து எடுக்கப்பட்ட கள் அரிசிக்கள்  அப்படி இருக்க வாழைக்கள் என்று சொன்னால் அது வாழையிலிருந்து எடுக்கப்பட்ட கள் என்று பொருள் தரும்.   வாழைகள் என்றால் பன்மைப் பொருளில் வரும். வாழைக்கள்- வாழைமரத்துக்கள். வாழைகள் - பல வாழை என்ற பன்மை.  இப்போது பாராட்டுக்கு வருவோம்.  பாராட்டுக்கள் என்றால் பாராட்டுக்குரிய கள் அல்லது பாராட்டில் இருந்து எடுக்கப்பட்ட கள் அல்லது பாராட்டால் ஆன கள்.  எனவே பாராட்டுகள் என்பதே சரி....! வாழ்த்துக்கும் அதுவே....   வாழ்த்துக்கள்- வாழ்த்தால் ஆன கள்   வாழ்த்துகள்- வாழ்த்

எளிய தமிழ் இனிய தமிழ் - இனிக்கும் இலக்கணம்

  மண்வெட்டி கொடுத்தான் (1) மண்வெட்டிக் கொடுத்தான் (2) இவ்விரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு....?  மண்வெட்டி கொடுத்தான் எனும் பொழுது மண்வெட்டியைக் கொடுத்தான் எனப் புரிந்து கொள்கிறோம்.   கூட ஒரு 'க்' சேர்த்து மண்வெட்டிக் கொடுத்தான் என்னும்பொழுது மண்ணை வெட்டிக் கொடுத்தான் எனப் புரிந்து கொள்கிறோம்.    ஒரே ஓர் எழுத்து சேரும்பொழுது பொருள் எவ்விதம் மாறுகிறது எனப் பார்த்தால்,      நுட்பமாகப் பொருள் உணர்த்துவதும் தமிழின் சிறப்புகளுள் ஒன்று என்பது புரியும்.     ஆனால் நடைமுறையில் நாம் இரண்டு இடங்களிலுமே மண்வெட்டி கொடுத்தான் என்று பிழையாகவேதான் எழுதி வருகிறோம். 'க்' சேர்த்து எழுதுவது இல்லை.  சொல்லின் இறுதியில் 'க்' எனும் மெய் எழுத்து வராது எனும் தவறான புரிதலும், 'க்' சேர்க்காவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற அலட்சியமும், திரும்பத் திரும்ப இவ்விதமாக எழுதப்பட்டதையே படித்துப் பழக்கமாகிவிட்டதுமே காரணம்.  க்,ச்,த்,ப் எனும் வல்லின மெய்கள் பெரும்பாலான இடங்களில் மிகுந்தே வரும் . இது வலி மிகுதல் எனப்படும்.  மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.   1) . வேலை கொடுத்தான் - க்

அந்த நாலு பேரு யாரு ?

 நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க என்ற ஒரு இன்டர்நேஷனல் காரணத்துக்காகவே நிறையப் பேர் சொந்த விருப்பங்களை கூடத் தியாகம் செய்து தவ வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  இந்த டயலாக்கைத் தூக்கிக் கொண்டு  என்னிடம் வந்தார் நண்பர் ஒருவர்.    "அப்படிப் பண்ணாத.... இப்படிப் பண்ணாத... அதப்‌ பண்ணாத ....இதப் பண்ணாத  .... இல்லைன்னா நாலு பேரு நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க....!" என்பது அவருடைய ஃபேவரைட் டயலாக். அவரிடம் கீழ்க்காணும்  கேள்விகளைக் கேட்டேன்.  #  அந்த நாலு பேரு யாரு....?  #  அவர்களின் செல் நம்பர் என்ன....?   # இந்த மாதிரி நாலு விதமாப் பேசுவது தவிர வேறு அவர்களுக்கு ஏதாவது வேலை அல்லது தொழில் என்று எதுவுமே இல்லையா....?   # அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களுடைய இந்த நாலு விதப் பேச்சை ஏன் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்? # ஒருவேளை அவர்களுக்கு இதுதான் வேலை என்றால் இதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்ன அல்லது பயன் என்ன....? இந்தக் கேள்விகளைக் கேட்டதுமே அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு கிளம்பினார்.   அந்த நாலு பேரில் அவரும் ஒருவராக இருப்பார் போலும் என நினைத்துக் கொண்டேன். 

ஏன் நாம் இப்படி.....?

 கோயம்புத்தூரில் வாலாங்குளத்திலும், பெரிய குளத்திலும், குறிச்சிக் குளத்திலும் பல கோடி ரூபாய் செலவில் பூங்காக்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. குறிச்சிக் குளக்கரையில் இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.   இங்கெல்லாம் ஒரு விஷயத்தைக் கவனித்தேன்... மொத்தப் பூங்காவிலும் குப்பைத் தொட்டி ஒன்றுதான் தூய்மையாக இருந்தது. ஏனெனில் அங்கு தான் யாருமே குப்பை கொட்டுவதில்லை. பெரும்பாலானோர் கைநீட்டிய திசையில், கால்போன தடத்தில், கண் கண்ட இடத்தில், போகிற போக்கில் குப்பைகளையும், கழிவுகளையும் வீசி எறிந்து பேரானந்தம் அடைகிறார்கள்.  பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், ஐஸ்கிரீம் குச்சிகள், குப்பிகள், குவளைகள்,சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட் கவர்கள், சாக்லேட் ரேப்பர்கள், வாட்டர் பாட்டில்கள்... இவை தவிர மீதியான உணவுப் பொருள்கள், தீனிகள், தின்பண்டங்கள் ,எச்சில்கள், தின்று துப்பப்பட்ட பாக்குக் கறைகள்...... மக்களே.....! நீங்கள் பூங்காவில் இருந்து வெளியேறிய மறுகணமே உலகம் அழிந்து விடப் போவதில்லை. அடுத்த நாளும் மக்கள் வருவார்கள்... அடுத்த வாரம் நீங்களே கூட மீண்டும் வரலாம்.... கொஞ்ச்ச்சம்...... ப்ளீஸ்.....!

இனிக்கும் இலக்கணம்- காற்றிசையும் நாற்றிசையும்.

 காற்றிசை  என்பதை எப்படிப் பிரித்து எழுதலாம்.....?   காற்று + இசை    அப்படியானால் நாற்றிசையை....?    நாற்று + இசை என்றும் பிரிக்கலாம்.  நான்கு + திசை என்றும் பிரிக்கலாம்.    தமிழின் நுட்பமும், ஆழமும், செறிவும், அழகும், வளமையும், தொன்மையும் இங்குதான் உச்சத்தில் நிற்கின்றன. உண்மையிலேயே காற்றுக்கு இசை உண்டா.... காற்றிலே இசை கலந்திருக்கிறதா.... அல்லது காற்று இசையைத் தோற்றுவிக்கிறதா....? வைரமுத்துவின் வரியிது....."துளை செல்லும் காற்று மெல்லிசையாதல்  அதிசயம்......!"   புல்லாங்குழலில் நுழையும் காற்று இசையாக வெளிப்படும் அதிசயத்தைச்  சிந்திக்க ஆரம்பித்தால் அது எல்லைகளற்று விரியும்.    90களில் வாசித்த மாலனின்  கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.  காற்று ஆனா பெண்ணா என வினவியிருப்பார்.  காற்று ,   இருப்பதைக் கலைக்கிறது;  எல்லைகளைத் தேடுகிறது;  எப்போதாவது இசைக்கிறது....!    அப்படியானால் ஆணா ....?    ஈரம் சுமக்கிறது ;  இதம் தருகிறது ;  இலக்கில்லாமல் நடக்கிறது.....!  ஒருவேளை பெண்ணோ....?  அற்புதமான வரிகள் அவை .  மண் ,விண்,அனல், புனல், வளி என்னும் ஐம்பூதங்களில் கண்ணுக்குப் புலப்படாதது காற்று ம

ஸியை ஸியை எல்லொய்

 புகழ்பெற்ற எக்கோ டூரிசம் சென்டர் அது. ரிசப்ஷன் டெஸ்க்கில் இருந்த பெண்மணி ஒருவர் மிகத் திறமையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.  அவரது பெயர் என்ன எனக் கேட்ட பொழுது "ஸியை ஸியை எல்லொய்" என்றார் .இவ்வளவு ப்ரொஃபஷனலாக இருக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு பெயரா என நான் வியப்பதையும் விழிப்பதையும் கண்ணுற்ற அவர்" என்ட பேரு சிசிலி...!" என்றார் .CICILY  என்பதைத்தான் அவர் ஆங்கிலத்தில் அவ்வாறு ஸ்பெல் பண்ணி இருக்கிறார் . "வீயிஆரொய் என்னைசியி "என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் . ஓ மை பிரியமான கடவுளே!

டீக்கடை

 2009 அல்லது 10 என நினைக்கிறேன்.... தென்மலை செல்லும் வழியில் செங்கோட்டைக்கு முன்பு வாசுதேவநல்லூருக்கும் கடையநல்லூருக்கும் இடையில் ஒரு டீக் கடையில் நாங்கள் மூன்று பேரும் டீ குடித்தோம். குடித்து விட்டு   எத்தனை ரூபாய் எனக் கேட்கக் கடைக்காரர் ஆறு ரூபாய் என்றார்.   மூன்று பேர் குடித்திருக்கிறோம் ...எனவே மூவாறு பதினெட்டு எனக் கணக்கெட்டு இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினேன்.  அவர் சில்லறை இல்லை என்றார்.  சரி இரண்டு ரூபாய்க்கு ஏதாவது மிட்டாய் கொடுங்க என்றேன் .   அவர் ஏகத்துக்கும் குழம்பி மொத்தமே ஆறு ரூபாய் தான் என்றார் . அதாவது ஒரு டீயின் விலை இரண்டு ரூபாய்தான். நீங்க எங்கிருந்து வர்றீங்க என அவர் என்னைப் பார்த்து வியக்க ,  மொத்தமே ஆறு ரூபாய் தானா என நான் வாய் முழுவதும் பிளக்க,  பேசாமல் இந்த ஊருக்குக் குடி வந்துவிடலாம் போலயே என நான் நினைக்க,    பேசாமல் இவங்க ஊருக்கு போய் டீக்கடை போடலாம் போலயே என டீக்கடைக்காரர் நினைக்க....     ஒரே ரணகளம் தான்....!

ஒரு கடல் ஒரு கோட்டை.....ஒரு மலை ஒரு நடை....

 பேகல் கோட்டையிலிருந்து ராணிபுரத்துக்கு ......   கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பேகல் கோட்டையைப் பார்வையிட எங்களது மூன்று நாள் பயணத்தில் இரண்டாம் நாளை ஒதுக்கி இருந்தோம். கோட்டையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓக்ஸ் ரிசார்ட்டில் இரவு தங்கி , காலையில் ஆளுக்கு 3 பூரிகளை சப்ஜியுடன் உண்டு, காஃபி அருந்தி 9 :30 மணிக்கு எல்லாம் கோட்டையின் நுழைவு வாயிலில் செல்ஃபி எடுக்க ஆரம்பித்து விட்டோம். நுழைவுக் கட்டணம் 25 ரூபாய். ஏக்கரில் பரந்து விரிந்த கோட்டை கொத்தளங்கள் ஒவ்வொன்றையும் நடந்து சென்று முழுமையாகச் சுற்றிப் பார்க்க மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும். புல்வெளிகளும் தோட்டங்களுமாக மூன்று பக்கமும் அரபிக் கடலால் சூழப்பட்டு ரம்மியமாகக் காட்சி தருகிறது பேகல் கோட்டை . கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இள நீல நிறமாகக் கோட்டையின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் கடல் மூன்று திசைகளிலும் தெரிகிறது.    கிபி 1650 இல் கட்டப்பட்ட இக்கோட்டை பம்பாய் படத்தில் மணிரத்னம் எடுத்த உயிரே பாடலின் மூலம் வெகு பிரபலமாயிற்று. குறைந்த பட்சம் மூன்று நான்கு மணி நேரம் கோட்டையுடன் ஒன்றி விட முட

சுகபேதி

 கமல்ஹாசன் ஒரு முறை பேட்டியொன்றில் நாம் ஒவ்வொருவரும் ஒரு அவுன்ஸ் மலத்தையாவது எப்பொழுதும் சுமந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது போலக் கூறி இருப்பார். உண்மையில் ஒரு அவுன்ஸ் அல்ல அதற்கு மேலும் நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நமது வயிற்றில் சுமந்து கொண்டே தான் இருக்கிறோம். சற்று முகம் சுளிக்கும் விதமாகத்தான் இனி வரும் வரிகள் இருக்கும்.. இருந்தாலும் உண்மை அதுதான். நமது வயிற்றை, குறிப்பாக குடலைச் சுத்தம் செய்வது என்பது உடல் நலத்தின் அடிப்படையும், ஆரம்பமும் ஆகும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் நாம் நமது வயிற்றைச் சுத்தம் செய்து கொள்ள முடியும்‌ . நேரடியாகத் தண்ணீரை குடலுக்குள் விட்டு சுத்தம் செய்வதற்கு உண்டான குழாய்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எப்படியேனும் குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியில் நமது உடலைச் சுத்தம் செய்வது நல்லது. பிறந்ததிலிருந்து இன்று வரை ஒரு முறை கூடச் சுத்தம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களை இருப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன்.  பொது இடத

இலக்கும் பயணமும்

  “It’s the not the Destination, It’s the journey.”  -Ralph Waldo Emerson கவி- ரம்மியமான மலைப்பகுதி...அதுல அப்படி என்ன விதமான ஈர்ப்பு விசை இருக்குன்னு தெரியல.... மறுபடியும் மறுபடியும் ஈர்த்துட்டே இருக்கு..... வெள்ளிக்கிழமை பிற்பகல்ல ஒரு ஐடியா தோணுச்சு. அடுத்த நாளே கே எஸ் ஆர் டி சி யோட ஃபாரஸ்ட் டூர் பஸ்ல ஒரு ட்ரிப் போகணும்னு......  முடிவு பண்ணதுமே கரூரில் இருக்கிற நண்பர் திரு சுரேஷ் அவர்களுக்கு போன் அடிச்சேன் . நம்மைப் போலவே அவரும் ஒரு வாண்டர்லஸ்ட்.    எங்கே போறதுன்னு டக்குனு ஒரு ஐடியாவும் கிடைக்கல.... அதனால ஓசூர் பக்கம் அப்படியே சும்மா ஒரு லாங் டிரைவ் போயிட்டு இருக்கேன்னார். விஷயத்தைச் சொன்ன அடுத்த ரெண்டு மூணு நொடி சத்தத்தையே காணோம். என்ன ஆச்சுன்னு கேட்டேன். U- Turn போட்டுட்டு இருக்கேன்னார். அவ்வளவுதான்.... தேனில காலை 8 மணிக்கு மீட் பண்ணலாம்னு முடிவாச்சு . நைட் 11 மணிக்கு கால் பண்ணினார் சுரேஷ் சார். கார் பிரேக் டவுன் ஆனதால சேலம் அருகே மாட்டிக்கொண்டதால் வர இயலாதுன்னு கூற, நோ ப்ராப்ளம்... சோலோ ட்ரிப்னு முடிவு பண்ணி, விடியற்காலை நாலரை மணிக்குக் கோவை பிரீமியர் மில் ஸ்டாப்ல பொ

நாய்ஸ் பொல்யூஷன்

 பத்தனம்திட்டயிலிருந்து கோயம்புத்தூருக்கு நான் புக் செய்திருந்த ஸ்லீப்பர் கிளாஸ் பஸ் 600 ரூபாயில் எதிர்பார்த்ததை விட ஸ்மூத்தாக இருந்தது.  எனக்குக்  கடைசி வரிசை UPPER BERTH  கிடைத்தது.  இருந்தாலும் அந்த ஏர்பஸ்  அலுங்காமல் குலுங்காமல் மிதந்த படி எங்களைச்  சுமந்து சென்று கொண்டிருந்தது‌ . கொட்டாரக்கரையிலிருந்து வந்த அந்த பஸ்ஸின் அப்பர் பெர்த்தில் ஏற்கெனவே  இருந்த மகராசன் எத்தனை நாள்களாய் அணிந்திருந்தாரோ தெரியவில்லை .....ஸாக்ஸிலிருந்து வந்த வாசனை  .....ஓ மை காட்.....!  10 மணி இருக்கும்.  தூங்கத்  தொடங்குகையில் ஏதோ ஒரு சீட்டிலிருந்து செல்போனில் லல லலலா டைப் சினிமா பாடல் ஒன்று நாராசமாக ஒலிக்க ஆரம்பித்தது .  ஒரே நிமிடத்தில் போதுமான அளவு கடுப்பை அது ஏற்றி விட்டதால் வேறு வழி இன்றி,  "யாரும்மா அது ... ஆஃப் பண்ணுங்க ....இல்லேன்னா ஹெட் போன் போட்டுக் கேளுங்க....!" என ஒரு சவுண்டு விட்டேன் .  எந்த சீட்டில் இருந்து சவுண்ட் வந்தது என யாருக்கும் தெரிந்திருக்காது.  எந்த சீட்டில் இருந்து பாடல் ஒலித்தது என்று எனக்கும் தெரியவில்லை.  எல்லாமே கர்டெயின்களை இழுத்து விட்டிருந்தார்கள்.  ஆனாலும்  அடுத்த ந

செல்ஃபி

  நண்பருடன் கோழிக்கோடு செல்ல வேண்டியிருந்தது . அவருடைய காரிலேயே செல்லலாம்‌ என்று கூறியதால் என்னுடைய காரைக் கோவையில் ஒரு வாகனக் காப்பகத்தில் விட்டுவிட்டுக் கோழிக்கோடு சென்றுவிட்டு அடுத்த நாள் திரும்பி வந்து எடுத்தேன் . காரை ஸ்டார்ட் செய்து எக்ஸிட் பாயின்டில் வந்து நின்று க்ளோவ் பாக்ஸில் கார் பார்க்கிங் டோக்கனைப் பார்த்தால் அதைக் காணோம். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறங்கிச் சென்று விஷயத்தைச் சொன்னேன் . பலவிதக் கேள்விகள் கேட்டு இது Genuine Case தான் என்பதை உணர்ந்து கொண்டார்கள். இருந்தாலும் ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறதென்றார்கள் . காரின் RC , இன்ஷூரன்ஸ் காப்பி எல்லாவற்றையும் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள் . என்னுடைய மொபைல் எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டார்கள். ரெஜிஸ்டர் போன்ற ஒன்றில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். 560 ரூபாய் ஃபைன் வாங்கிக் கொண்டார்கள். நம்பர் ப்ளேட் தெரியுமாறு காருடன் என்னை நிற்க வைத்து ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றார்கள். ஒரிஜினல் ஓனர் நான்தான் ...வேறு யாரும் இந்தக் காரை எடுக்க இனி வரமாட்டார்கள் என்றேன் .....ம்ஹூம்....ஒத்துக் கொள்ளவில்லை. சரி

முதுமை

  டூவீலரில் சென்று கொண்டிருந்த போது அந்த மூதாட்டி கைநீட்டி லிஃப்ட் கேட்டார் . எஃப்.ஸி . போன்ற ஒரு நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கில் முதிர்ந்த வயதில் இருக்கும் அப்பெண்மணி ஏறி அமர முடியாதென நினைத்தேன். ஆனால் 65 வயது மதிக்கத்தக்க , ஒடிசலான உடலையுடைய அந்தப் பெண் கைநீட்டிய தோரணையில் அனிச்சையாக வண்டியை நிறுத்தினேன். "நீங்க இந்த வண்டில ஏறி உட்கார்ந்து வர்றது ரொம்பச் சிரமம்" என்றேன் . அதற்குள் மந்தாகினி யானையில் ஏறுவதுபோல வெகு லாவகமாக பைக்கில் ஏறி அமர்ந்திருந்தார் அந்த அம்மாள். அசந்து போன நான் வண்டியை நகர்த்த , " என் பேரன்களும் இதுமாதிரிப் பெரிய வண்டிகள்தான் வச்சிருக்காங்க , என்னை அடிக்கடி பைக்லதான் கூட்டிட்டுப் போவாங்க , எனக்குப் பழக்கம் இருக்கு பயந்துக்காத...!" என்று தெம்பூட்டினார் . தொடர்ந்து ," பைக் என்னப்பா பெரிய பைக்கு , நான் தென்னை மரத்துலயே ஏறுவேன் ,இன்னைக்குக் காலைல கூட அஞ்சு மரம் ஏறியிருக்கேன் " என்றவர் அவர் செய்யும் வேளாண்மை சார்ந்த வேலைகளைச் சொல்லச் சொல்ல எனக்கு மூச்சு முட்டியது . வயதைக் கேட்டேன். " அதெல்லாம் தெரியாதுப்பா....எண்பதுப் பக்கம் இருக்கும்&quo

மனம் மயங்கும் வயநாடு - PART 1

Image
             க டவுளின் படைப்புதான் உலகம் முழுவதுமே எனினும் அவர் மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்தபோது படைத்தவற்றுள் ஒன்றுதான் கேரளம் போலும் .     இயற்கையின் அத்தனை வித அழகையும் கொட்டிப் படைக்கப்பட்ட ஒரு பரப்பு தான் இந்தக் கடவுளின் நாடு எனப்படும் கேரளம் .  ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்கள் , பரவி விரிநத கடல் பரப்புகள் , பெருகி வழிந்தோடும் ஆற்று நீர்ப் பெருக்குகள் , தெளிந்த பச்சையாய்ப்   பரந்து விரவிய சமவெளிகள் , கொட்டித் தீர்க்கும் பேரருவிகள் , சுழித்துக்கொண்டும் நுரைத்துக்கொண்டும்   ஓடித் தெறிக்கும் சிற்றோடைகள் , வயல்வெளிகள் , வண்ணக் காடுகள் , விலங்கினங்கள் , புள்ளினங்கள் , புல்லினங்கள் , பூக்கள் , சலிக்காமல் பெய்து புரளும் பெருமழைகள் … இப்படியாகப்   படைத்து முடிக்கக்   கடும் பேருழைப்புக்   கடவுளுக்குச் செலவாகியிருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும் .        . தமிழகத்தின் மிகப்பெரும் அச்சு ஊடக நிறுவனத்தின் இதழ்களில் ஒன்றான மோட்டார் விகடனின்   கிரேட் எஸ்கேப் பயணத்துக்காக இருமுறையும் அதற்கு முன்பு சில முறையும் சென்ற