முத்தத்துவம் -நேரிசை வெண்பாக்கள்


முத்தத்துவம் என்ற தலைப்பில் முப்பது வெண்பாக்களை எனது "சூரல் பம்பிய சிறுகான் யாறு" நூலில் காணலாம். அவற்றை ஐந்தைந்து பாடல்களாகப் பதிவேற்றலாம் என்று முதல் ஐந்து பாக்களை இங்கு தருகிறேன். எனது நூலில் அதிகம் பாரட்டப் பெற்ற பாக்களுள் இதுவும் ஒன்று. முப்பதையும் படித்து முடித்த பிறகு முத்தமிட்ட உணர்வுக்கு ஆட்பட்டேன் என்று எனது நண்பர் ஒருவர் கூறியதை என்னால் மறக்கமுடியாது.




முத்தேயென் பொற்சிலையே மொட்டவிழ்நத மோகனமே
முத்தக் கவிதை மொழிகிறேன் - மொத்தக்
கதைசொலவுங் கூடுமோ கண்டாலே உன்னை
இதழ்சிவந்து  போகும் எனக்கு!




முத்தமல்ல நானுனக்கு மூச்சுமுட்ட இட்டவை
அத்தனையும் அன்பின் அழியாத - முத்திரையாம்
சித்திரமாய்த் தீட்டினேன் செவ்விதழில் நான்கொண்ட
மொத்தக்கா தல்தன்னை மொண்டு!






முத்தமன்று நீயே முதன்முதலில் தந்தது
சொத்தெனக்கு வேறேன்ன சொல்லுவேன் - இத்தரையில்
பெற்றேனுன் முத்தப் பெரும்பே றதன்மூலம்
கற்றேன் எழுதக் கவி!





தேன்பாகில் ஊறும் திராட்சை உதடுகளை
ஏன்தான் படைத்தாய் இறைவனே - நான்கண்டு
கவ்விச் சுவைக்கத்தான் காலமெல்லாம் பாடுபட்டுச் 
செவ்விதழைத் தந்தாயோ செய்து!




கரும்போ கனிச்சாறோ கற்கண்டோ பூவின் 
அரும்போ இதழிரண்டும் ஐம்பொன் - உருவோ
அருந்தேனோ நானும் அருந்தேனோஎன்றும் 
விரும்பிச் சுவைக்கும் விருந்து !                                         
                                                                                                              தொடரும் )

Comments

  1. பாக்களைப் பார்த்த உடன் பறந்து வந்து விட்டேன்.

    இனிப்பது இதழ்கள் மட்டுமா ?
    இங்கே தமிழும் தான்

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  2. இதழ் பார்க்க
    இனிய நினைவுகள்

    ReplyDelete
  3. அன்பின் ரஜினி பிரதாப் சிங் - இதழினை வைத்து எழுதப்பட்ட காதல் சொட்டும் கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி