யாப்பருங்கலக்காரிகை -பாயிரம்- உரை

                                                         பாயிரம்
                                                அவையடக்கம்
தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவிக்
கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல்
யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
ஆனா வறிவின வர்கட்கென் னாங்கொலெ னாதரவே!
                                                                                  யாப்பருங்கலக் காரிகை‍‍‍‍‍‍ - 2.


"ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிரமல்லது பனுவலன்றே" என்று சொல்வர். காரிகையாசிரியரும் இதில் தவறாது பாயிரத்துடன் தொடங்குகிறார்.
                      அக்காலத்தில் நூலாசிரியர் தனது நூலினைக் கற்றோர் அவையில் அரங்கேற்ற‌ வேண்டும். அவையோரது ஐயங்களை அகற்றிய பின்னரே நூலானது அரங்கேறும். எனவே நூலின் அருமையையும், நூற்பொருளின் தன்மைகளையும் முதலில் அவையோரிடத்து அறிவித்துத் தனது எளிமையையும் நூலாசிரியர் புலப்படுத்துவது வழக்கம்.
                   ஆன்றோர் நிறைந்த அவையில் தனது அடக்கத்தைக் கூறிவிடுவதாலும்  இதனால் அவையோர் மிகைபடக் கேளாது மென்மையாக அடக்கப்பட்டு விடுவதாலும் இஃது அவையடக்கமாயிற்று.
            இப்பாடலில் நூலாசிரியர் தனது அடக்கத்தை உரைப்பது காண்போம்
                                                            பதவுரை
தேனார் ‍          -  தேன் பொருந்திய‌
தொங்கல்      - மாலை
மீனவன்         - மீனக் கொடியுடைய பாண்டியன்
கேட்ப             - கேட்க, கேட்கும்பொழுது
தெண்ணீர்     - தெளிந்த நீர்
கான்                - சோலை
அருந்தவன்  - அரிய தவ முனிவனாகிய அகத்தியன்
நகை                - சிரிப்பு
யானா             -  நானா
ஆனா              - குறையாத‌
கொல்             - அசைச் சொல்
ஆதரவு           - துணிவு.
                                                 தெளிவுரை
             தேன் ஆர் கமழ்தொங்கல் மீனவன் கேட்ப -தேன் பொருந்திய மணங்கமழும் வேப்ப மாலையைச் சூடிய பாண்டிய மன்னன் கேட்க,
            தெண்ணீர் அறுவிக் கானார் மலயத்து அருந்தவன் சொன்ன‌-  தெளிந்த நீரையுடைய அருவி சூழ்ந்த சந்தனக்காடுடைய பொதிய மலையில் அரிய
தவமேற்கொண்ட அகத்தியன் கூறிய 
கன்னித் தமிழ் நூல். -
அழிவற்ற இளமையான தமிழின் யாப்பிலக்கண நூலினை 
யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால்- சிறியவனாகிய நானா எழுதுகிறேன் என்று எண்ணும் போது எனக்கே சிரிப்பு மேலிடுகிறது.
            ஆனா அறிவினவர்கட்கு என்னாங்கொல் என் ஆதரவே -அப்படியிருக்க குறையாத அறிவு மிகுந்த ஆன்றோரிடத்து எனது இந்தத் துணிவு என்ன ஆகுமோ, நான் அறியேன்!
                                                              கருத்துரை
            தான் எழுதிய இந்நூலை அறிஞர் பெருமக்கள் என்ன சொல்வார்களோ என அவையடக்கத்துடன் நூலாசியர் இப்பாடலில் கூறுகிறார்.
          பொதிய மலை என்பது இன்றைய நெல்லை மாவட்டக் குற்றாலச் சாரலாம்.
 மூவேந்தர்க்கும் மாலையும், கொடியும் உண்டு.
 பாண்டியன்  - வேப்ப மாலை, மீன் கொடி.
 சேரன்             - ஆத்தி, விற் கொடி.
 சோழன்          - பனம்பூ, புலிக்கொடி.
 கொல் என்பது அசைச் சொல் ஆகும்.
  அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ என்பது குறள்.
    காரிகை யாவும் ஏகாரத்துடனே முடியுமாதலின் ஆதரவே என்றதுடன் இழிவு சிறப்பையும் நிறுத்துகிறது.   




                             

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி