பல்-பள்ளம்-பழம்



உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் சிறப்புகளுள் 'ழ' கரமும் ஒன்று.அது மட்டுமல்லாமல் ண,ற, ள என்னும் எழுத்துகளும் தமிழின் தனிச் சிறப்புகளாம். பொதுவாக ழ, ல மற்றும் ள என்னும் மூன்று எழுத்துகளும் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாவுகளில் ஒரே எழுத்தாகிவிட்டன.இனத்திலும், சாதியிலும், மததிலும்,நிறத்திலும், பணத்திலும் வேற்றுமைகளை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பவன் உச்சரிப்பில் மட்டும் ஒற்றுமையைப் பேணுகிறான்.இனத்தில் வேறுபாடு இருந்தால் போதாதா, எழுத்தில் வேறு வேண்டுமா என நினைக்கிறானோ என்னவோ?
வெள்ளம் என்று சொல்வதைக் கேட்டு எழுதும் போது எந்த 'ல' என்று கேட்கிறான்.


தமிழில் ஒரே 'ள' தான் இருக்கிறது என்று அழுத்தந்திருத்தமாக ஒலித்துக்காட்டினாலும் 'ள' என்று ஒலி வேறுபாடுறக் கூறப்படுவதை அவனால் விளங்கிகொள்ள முடியவில்லை.ல, ள மற்றும் ழ இடையிலான  ஒலி வேறுபாடு அவனுக்குப் புரியமாட்டேனென்கிறது.
எளிமையான ஒரு பயிற்சியை இங்கு கற்றுத்தருகிறேன். ல,ள,ழ ஆகிய மூன்று எழுத்துகளையும் அவற்றின் ஒலிப்பையும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இது உதவும்.
'ல்' என்னும் எழுத்துக்குப் 'பல்' என்னும் சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும் . 'ல்' என்று சொல்லும் போது நுனி நாக்கு மேல்வரிசை முன்பல்லின் பின்புறம் படவேண்டும்.(சொல்லிப் பார்க்கவும்)


'ள்' என்னும் எழுத்துக்குப் 'பள்ளம்' என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். 'ள்' என்று சொல்லும் போது நுனிநாக்கானது மேல்வரிசை முன்பற்களின் உள்புற ஈறுகளுக்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளம் போன்ற பகுதியில் பட வேண்டும் . (சொல்லிப் பார்க்கவும்)
'ழ்' என்னும் எழுத்த்க்குப் பழம் என்ற சொல்லை நினைவில் வைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை விழுங்குவது போல உள்ளிழுத்து மடக்கவும்.
பல்-பள்ளம்-பழம்..... இது ஓர் எளிமையான பயிற்சி! இப்பயிற்சிகளை ஒரு பயிலரங்கில் கற்றுக் கொடுக்கும்போது, மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவியொருத்தி (சங்கீதா என்று நினைவு) கேட்டாள்:
"பல் என்று சொல்லும்போது நாக்கு பல்லில் பட வேண்டும் என்கிறீர்கள்! அப்படியானால் 'கல்' என்று சொல்லும்போது நாக்கு கல்லில் படவேண்டுமா?"
நம் குழந்தைகளின் புத்திகூர்மையும் நகைச்சுவையும் presece of mind எனப்படும் சமயோஜிதமும் வியக்க வைக்கின்றன.
இது போன்ற பல சொற்களையும், தொடர்களையும் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்க்கவும்.உதாரணத்திற்குச் சில:







*கல்,நில்,மலை,கலை,கள்,வெள்ளை,மக்கள், விழை, வாழ்க்கை,ஆழி
*வாழைப்பழத்தோல் வழுக்கி ஏழைக்கிழவன் கீழே விழுந்தான்
*அவன் நல்லவன் அல்லன்
*கல்லிலிருந்து எடுத்தான்
*சொல்லொன்று சொல்லேன்
*தள்ளும் உள்ளம்
*தள்ளாடித் தள்ளாடிச் சென்றான்
*பள்ளத்தில் உள்ள முள்ளெடு
*கீழே விழுந்து அழுதான்
*கொழுகொழுத்த வாழை
மேற்காண் தொடர்களெல்லாம் ஒரேவகையான எழுத்தை ஒலித்துப் பழக உதவும். இதற்கு நாநெகிழ் பயிற்சி என்று பெயர். வேறுபட்ட ஒலிகளையுடைய எழுத்துகள் கலந்து வரும் சொற்களையும், தொடர்களையும் ஒலித்துப் பழகுவதர்கு நாபிறழ் பயிற்சி என்று பெயர்.
உதாரணங்கள்:
*தொழிலாளி
*மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை
*வில்லேருழவர் பகை கொளினும் கொள்ளற்கச்
சொல்லே ருழவர் பகை
*பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது
மேற்காண் தொடர்களெல்லாம் ஒரேவகையான எழுத்தை ஒலித்துப் பழக உதவும். இதற்கு நாநெகிழ் பயிற்சி என்று பெயர். வேறுபட்ட ஒலிகளையுடைய எழுத்துகள் கலந்து வரும் சொற்களையும், தொடர்களையும் ஒலித்துப் பழகுவதர்கு நாபிறழ் பயிற்சி என்று பெயர்.
உதாரணங்கள்:
*தொழிலாளி
*மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை
*வில்லேருழவர் பகை கொளினும் கொள்ளற்கச்
சொல்லே ருழவர் பகை
*பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது
நெற்றிக்குப் பொட்டிட்டு, விழிகளில் மையிட்டு, முகத்தில் நறுமணத்தைலமும் பொடியும் பூசி, இமைகளில், உதட்டில், கன்னங்களில், கூந்தலில்,நகங்களில் வன்ணமிட்டு, கழுத்து, காது, மணிக்கட்டில் பொன், வெள்ளி, ப்ளாஸ்டிக், ப்ளாட்டினம், ரப்பர் அணிகள் பூட்டி, நகங்களை சீராக்கி, தலைமுடி நறுக்கி, கண்கவர் ஆடைகளையும் , கண்கண்ணாடிகளையும் குளிர்சாதன விற்பனையகங்களில் ஐந்துமணிநேரம் பொறுக்கிக் கழித்து எடுத்துத் தள்ளி, சோர்ந்து தேர்ந்து வாங்கி அணிந்து.........அழகுண்ர்ச்சியும் ரசனையும் மிகுந்தவர்கள்தாம் நாம்!ஆனால் வாயிலிருந்து வெளிப்படும் மொழியும் அதே போல அழகுடன் இருப்பதன் சுகத்தையும், சுவையையும் உண்ர்ந்தால்தான் நமது அழகுணர்ச்சியும் ரசனையும் முழுமை பெறும்.இத்தனை அலங்காரங்கள் செய்து கொண்டு, வாயைத் திறக்கும் போது , 'கலீஜாக' ல, ள, ழ மூன்றையும் ஒன்று குழப்பி அடிப்பது AWKWARD -இலும் BACKWARD ஆகத் தெரிகிறது எனக்கு.நாவு எனக்குத் திரும்ப மாட்டெனென்கிறது என்பதில் என்ன கருமாந்திர பந்தா இருக்கிறதோ தெரியவில்லை.
"எனக்கு கடுமையான உள்மூலம் இருக்குங்க"
"எனக்கு நாலு நாளா சரியா டூபாத்ரூம் வர மாட்டேங்குதுங்க"
"வேகமா நடந்தா முட்டி வலிக்குதுங்க"
என்று சொல்லும்போது நம்மிடத்தில் தோன்றாத பந்தா "தமிழ்" பேசும் போது எனக்கு நாக்கு புரள மாட்டேங்குது" என்று சொல்லும்போது எங்கிருந்துதான் வந்து சேர்கிறது?

அதானால்தான் :"யாகாவாராயினும் நாகாக்க "என்றானோ தெரியவில்லை!
"பள்ளியில் பேசினால் ஃபைனென்றும் செய்தித்தாள்
அள்ளினால் சந்திப் பிழைகளும்-கொல்லுமச்
சேனல் யுவதிகளால் செத்தும் செம்மொழி
ஆனது இன்பத் தமில்"

Comments

  1. தமிழ் தங்களிடம் விளையாடியிருக்கிறது.

    ReplyDelete
  2. இருங்க முழுதாய் படித்தவிட்டு கருத்துரை வழங்குகிறேன்.

    ReplyDelete
  3. very nice boss

    ReplyDelete
  4. உமது பல்-பள்ளம்-பழத்தில் தமிழின் தனிச்சிறப்பாகிய "ழ"கர, "ல'கர,"ள"கர பயன்பாடுகளை சிறப்பாக சொல்லியிருப்பது நன்று.
    அகிலம் தங்கதுரை

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி