அல்ல-அன்று-அல்லர்-அல்லன் -அல்லள்


"பந்தைப் பிடித்தது அவன் அல்ல"
"நேற்று வந்தவர் இவர் அல்ல"
"அது அவனுடைய நூல் அல்ல"
மேற்கண்ட தொடர்களுள் சரியானவை எவை? எவையுமே அல்ல!
"அல்ல" என்னும் சொல்லானது அஃறிணைப் பன்மைச் சொற்களுக்குமட்டுமே உரியதாகும்.
"மேற்கண்ட நான்கு தொடர்களுமே சரியானவை அல்ல"
இங்கு "தொடர்கள்" என்ற அஃறிணைப் பன்மை வரும்போது "அல்ல" என்பதைப் பயன்படுத்தலாம். ஆனால் "அவன்" என்று வரும்போது "அல்லன்" என்றும் "அவர்" என்று வரும்போது "அல்லர்" என்றும் "அவள்" என்று வரும்போது "அல்லள்" என்றும் அது என்று வரும்போது "அன்று" என்றுமே  வரவேண்டும்.

முதல் தொடரைப் பார்ப்போம்.
"பந்தைப் பிடித்தது அவன் அல்ல"
பந்தைப் பிடித்தவன் ஆண்பாலாதலால் "பந்தைப் பிடித்தவன்" என்றும் "அல்லன்" என்றும் வந்து "பந்தைப் பிடித்தவன் அவன் அல்லன் " என்று வருவதே சரியான தொடராகும்..
"நேற்று வந்தவர் இவர் அல்லர்" என்று இரண்டாவது தொடர் அமைய வேண்டும்.
"அது அவனுடைய நூல் அல்ல"- இது மூன்றாவது சொற்றொடர்.நூல் என்பது ஒருமையாதலால் "அன்று" என வர வேண்டும். மேலும்"அது" என்னும் சுட்டு அடுத்து வரும் சொல் மெய்யில் தொடங்கினால் மட்டுமே வரும்.

உயிரில் தொடங்கும் போது :அஃது" என்று வந்து "அஃது அவனுடைய நூல் அன்று" என அமையும்.இப்பொழுது மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.
"அவன் சிறந்த வீரன் அல்ல/ன்"
"அவள் ஆடத் தெரியாதவள் அல்ல/ள்"
"நேரு கயமையைப் பொறுத்துக் கொள்பவர் அல்ல/ர்"
"அஃது ஓர் அழகிய சிற்றூர்"
மேற்கண்டவற்றுள் இறுதித் தொடரைக் காண்போம்.
கிராமம் என்பது தமிழ்ச்சொல் அன்று.சிற்றூர் என்பது தூய தமிழ்ச்சொல்.
'அழகிய' என்று உயிரில் தொடங்கும் சொல்லின் முன் "ஒரு" வராது."ஓர்"வந்தது.

""ஓர்" என்பதும் உயிரில் தொடங்குவதால் "அது" என்பது "அஃது" என்று வந்தது. 
"விளிந்தாரின் வேறல்லர்" என்னும் குறளை (எண்143) நோக்குக! "வேறல்ல" என்னாமல் "வேறல்லர்" என்றே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.(விளிதல்-இறத்தல்).
எனவே "அன்" விகுதி ஆண்பாலுக்கும், "அள்" பெண்பாலுக்கும்,"அர்" பலர்பாலுக்கும், "று" ஒன்றன்பாலுக்கும், "அ" பலவின்பாலுக்கும் வருதல் வேண்டும்.
 வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!!

Comments

  1. அருமையான பதிவு. தமிழை அழகாக கற்பிக்கின்ற பதிவு. பல பதிவர்களுக்கு தேவையான பதிவு. எளியேன் பயன்பெற்ற பதிவு.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நல்ல முயற்சி

    ReplyDelete
  3. ஐயன்மீர், பட்டையக் கிளப்பிட்டீங்க. அருமையான தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  4. arumai ungal thiramai anal neengalun kathalai ivvaru sahadikka vandame

    ReplyDelete
  5. அன்று அல்ல அல்லர்-அல்லன் -அல்லள் இன்று நல்ல சொல்லர் நீர் என சொல்ல வைக்கிறது.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி