எளிய தமிழ்! இனிய தமிழ்!!



"அலுவலர் அவனுக்காகப் பரிந்துரை செய்தார் "
"கட்டுரையிலிருந்த பிழைகள் திருத்தம் செய்யப்பட்டன "
"முன்னுரிமப் பட்டியலிலிருந்து அவனது பெயர் நீக்கம் செய்யப்பட்டது"
"சாலை மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது "
மேற்கண்ட தொடர்களெல்லாம் அடிக்கடி நமது விழிகளிலும் செவிகளிலும் விழுபவை.சற்றுக் கூர்ந்து நோக்கினால் "செய்தல் " எனும் சொல் அத்தொடர்களில் பெருவிருப்புடன் எடுத்தாளப்பட்டுள்ளது தெரியவரும். "செய்தச்ல் " என்பது ஓர் அருந்தமிழ்ச் சொல்தான்.வினையெச்சங்களை விளக்குவதற்காக நன்னூலார் "செய்" என்ற பகுதியையே  எடுத்துக்காட்டி விளக்கியிருப்பார் .
"செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச் செயின் செய்யிய செய்யியர்
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற
ஐந்தொன்றாறு முக்காலமும் முறைதரும்" (நூற்பா எண் :343 )
இதன் மூலம் அனைத்து வினைகளுக்குமான எச்சங்களை வருவித்துக்கொள்ளலாம்.இத்துணைச் சிறப்பு மிகுந்த சொல் என்பதற்காக வகைதொகையில்லாமல் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா ?மின்னும் பொன்னூசியைக் கண்ணிலும் குத்திக்கொள்ளலாமா?ஊசியின் பயன்படுகளத்தில் எடுத்தாள்வதுதானே மதியுடைமை ?


"பரிந்துரை செய்தார்" என்பதைவிடப் "பரிந்துரைத்தார்"   என்பதும்
"திருத்தம் செய்யப்பட்டன " என்பதைவிடத் "திருத்தப்பட்டன " என்பதும்
"நீக்கம் செய்யப்பட்டது" என்பதைவிட "நீக்கப்பட்டது " என்பதும்
நிதி "ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்பதைவிட நிதி "ஒதுக்கப்பட்டுள்ளது " என்பதும் எளிமையாகவும் , இனிமையாகவும் , பொருத்தமாகவும் இல்லையா?காதைத் தொடுவதற்குக் கழுத்தைச் சுற்றுவானேன் ?
"செய்தல்" என்பதற்குப் " பண்ணுதல்" என்றும் பொருளுண்டு. அந்தப் பழக்கத்தில்தான்,
"மார்னிங் பெட்லருந்து எழுந்ததுமே ப்ரஷ் பண்ணி , ஷேவ் பண்ணி, ட்ரெஸ் பண்ணி, லேட் ஆகி பஸ்ஸை மிஸ் பண்ணி........."


என்று தமிழன் திருவாய் மலர்ந்து தெளிந்த மொழிபேசிக் கன்னித் தமிழைப் பண்ணித்தமிழாக்கிப் பரவசங் கொள்கிறானோ என்னவோ ?
 மொழியின்கருத்தை அறுத்துப் பிழைப்பு நடத்துங் கூட்டம் தனித்துவத்தை இழந்துதான் போய்விடும் . மொழி என்பது ஊடகம் மட்டும் அன்று , எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள. அஃது ஓர் அடையாளம்! அது ஒரு வரலாறு ! அது ஒரு பண்பாடு!


தமிழுக்கு மட்டும் சொல்லவில்லை!டமிழில் பிறமொழிச் சொற்களை அளவுக்கதிகமாகக் கலந்து, அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதென்பது தமிழை மட்டும் இழிவுபடுத்துவதன்று.எந்த மொழியிலிருந்து சொற்களை எடுக்கிறோமோ அந்த மொழியையும் இழிவுக்குட்படுத்துகிறோம் என்பது ஆழ்ந்து சிந்திக்கப் புரியும். நான்  எடுத்துக்காட்டிய " மார்னிங் பெட்ல...." என்ற தொடரை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்!  ஆங்கிலத்தில் பிறமொழியைக் கலந்தது போலத் தெரியும்!
 பிறாமொழி கூடாது என்பதன்று என் வாதம் !எந்த மொழி பிடித்திருக்கிறதோ அந்த மொழியிலேயே முழுவதுமாகப் பேசிவிடலாமே! ஆற்றலுண்டா ?


எழுத்தாளர் ஒருவர் சொன்னதுபோல," நான் ஏன் இந்த ஆங்கிலப் புலமையின்  ஆழமும் நீளமும் !பேசும் மொழியிலேயே இவ்வளவு குழப்பங்கள் இருந்தால் , வெளிவரும் கருத்துக்களில் எவ்வளவு இருக்குமோ?


ஆங்கிலம் பேசினால்தான் அறிவாளி என்ற கருத்து மனதின் அடியாழத்தில் பதிந்து புதைந்து கிடப்பதால் கிளர்ந்த தாழ்வு மனப்பான்மையால்தான் ஆங்கிலத்துக்கு அலைகிறானே தவிர, ஆங்கிலத்தின் அழகோ, இலக்கிய வளமோஅல்லது உலகப் பரவலோ காரணமாக இருக்க முடியாது!
தாம் பேசுபவையும் எழுதுபவையும் பிழையானவை என்பதையே அறியாதவர்களும், பிழையோ கொலையோ அடுத்தவர்களுக்குப் புரிந்தால் போதாதா, குடியா முழுகிவிடும் என்பவர்களும் பெருகிவிட்டதுதான் கொடுமையிலும் கொடுமை!
குத்தாட்டங்களும் கொடுந்தொடர்களும் பார்த்து வளரும் கூட்டத்திடம் என்ன சொல்லிப் புரிய வைப்பது ?
தமிழே ! முடிந்தால் உன் கற்பை நீயே காப்பாற்றிக் கொள்!!












Comments

  1. தமிழ்,தமிழனிடம் மாட்டிக்கொண்டு ..படும் பாடு அதிகம்.

    மொழி என்பது அறிவாற்றலை காண்பிப்பது அல்ல..அது ஒரு இனத்தின்
    அடையாளம் என்று தமிழன் என்று உணர்வானோ?

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி