கனவில் வரட்டுமா?

நேரிசை வெண்பாக்கள்:
மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி-
http://inthiya.in/ta/?p=7304

மூன்றாம் கோணம் வலைபத்திரிகை அறிவித்துள்ள கவிதைப்போட்டிக்காக அவர்கள் கொடுத்திருந்த படத்தை வைத்து எழுதிய கவிதை இது.


கனவில் வரட்டுமா?   



சூழ்ந்த துயரும் சுகமும் மறந்திரவில்
ஆழ்ந்து துயிலும் அழகேநான் - வாழ்ந்து
பெறுவது வேறென்ன பெண்ணரசி உன்றன்
குறுநகை யன்ன கொடை!


திறவாயோ என்றுன் திருவடியில் சாய்ந்தே
உறங்காமல் பார்த்திருப்பேன் உன்னை - நிறமொளிரும்
ஓவியம்போல் எவ்வா றுறங்குகிறாய் பக்தன்போல்
சேவித்து நின்றேன் சிலிர்த்து!


தங்கத் தளிர்க்கொடியே தாமரையே வான்மதியே
பொங்கிப் பெருகுதடி பொன்முகத்தில் ‍- ‍ தங்கித்
தினவெடுக்கும் பேரழகைத் தீண்ட வருவேன்
கனவிலுன்மேல் மேகமாய்க் கவிழ்ந்து!

தூங்கிப் புரள்கிறாய் தோகையே கண்டுள்ளம்
ஏங்கித் தவிக்கிறது எப்படித்தான் -தாங்கிக்
கழிப்பேனோ வாழ்வைநான் காதல்நோய் தீண்டக்
கிழியாதோ என்னிதயம் கேள்!


நிலவும் கவியெழுதும் நீயுறங்கும் சீரைச்
சிலநொடி பார்த்தாலே சிந்தை - கலைந்துவிடும்
நில்லாதே என்னாவி நெஞ்சுக்குள் தூக்கத்தால்
கொல்லாதே மூடியகண் கொண்டு!

புரண்டு படுக்காதே பூகம்பம் என்னுள்
திரண்டு பிதுங்கித் திமிறும் - இரண்டு
மலைகள் நிகர்த்த மதுக்கலசம் கண்டு
நிலைகுலையச் செய்யும் நிமிர்ந்து!


அள்ளிக் கரங்களில் அப்படியே தூக்கிவிடத்
துள்ளிக் குதித்துத் துடிக்குதடி - உள்ளம்
கனவில் ஒருமுறைநீ கண்டுவிட என்னைத்
தினமும் புரிவேன் தவம்!

சிற்பமாய் உன்னைச் செதுக்கிய ப்ரம்மனின்
கற்பனைதான் என்னேபோ கண்டவுடன் - பொற்சிலைதான்
தூங்குகிற தென்றே துணிவர் எவரும்நீ
தூங்குகிற பேரழகு பார்த்து!



உறங்குகிறாய் அங்கே உருகிநான் இங்கே
கிறங்குகிறேன் வண்ணநிறைக் கிண்ணந் - திறந்தூற்றிப்
பெய்து முகிலும் பிசகில்லா மெத்தையை
நெய்து கொடுத்ததோ சொல்!

பின்னிரவில் மெல்லப் பிறைநிலவும் வந்தெட்டிச்
சன்னல் வழியே சரிந்தபடி - கன்னிநீ
தூங்குவதைப் பார்த்தபடி தொண்டை செருமிவிடும்
ஏங்கிப்போய் ஓர்பெரு மூச்சு!




Comments

  1. அருமையான வார்த்தைத் தொடுப்புகள் அழகான உணர்வுகள் கவிதை கலக்கல் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான வார்த்தைகளின் கதம்பம் இந்தக் கவிதை..

    ReplyDelete
  3. கனவில் வரட்டுமா?

    "சிற்பமாய் உன்னைச் செதுக்கிய ப்ரம்மனின்
    கற்பனைதான்" என்னேபோ கண்டவுடன் - பொற்சிலைதான்
    தூங்குகிற தென்றே துணிவர் எவரும்நீ
    தூங்குகிற பேரழகு பார்த்து!
    பிரம்மனின் கற்பனையை உமது கற்பனை உச்சுக்கொட்டும் அளவு விஞ்சிவிட்டது போரும்!வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கவிதை சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Word limit 100 right?!

    But beautiful phrasing!!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

நூல் வெளியீடு

ஆனாலும் பாவமந்த அரசுப் பேருந்து நடத்துனர்.