முடிவற்ற சாலை....

 

அஃதொரு காலைநேரத் திங்கள்கிழமை.

 

“சங்கரன்கோவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்து நிமிட வேலை ஒன்று இருக்கிறது.புதன்கிழமை போயிட்டு வந்துடலாமா…?” என அலைபேசியில் கேட்டார் நண்பர் ஆண்டனி.

 

கோயம்புத்தூரிலிருந்து ஆறுமணி நேரப் பயணம்.

 

”அப்படியா….?” என ஒரு கணம் யோசித்தேன்.

 

“சங்கரன்கோவிலில் பதினோரு மணிக்கெல்லாம் வேலை முடிஞ்சுடும்.அப்படியே குற்றாலம் போய்க் குளிச்சிட்டு, செங்கோட்டை பார்டர் கடைல ஈவினிங் பரோட்டாவையும் சாப்ஸையும் ஒரு வெட்டு வெட்டிட்டு வரலாம்”        என்று அடுத்த அஸ்திரத்தை எறிந்தார்.

 

இது போதாதா…”எத்தனை மணிக்குக் கிளம்பணும் ..?” என்று கேட்டுவிட்டு ,

“போறதுதான் போறோம்…அப்படியே தென்மலையையும் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடலாம் ” என்றேன்.

  பதிலுக்கு அவர் “தென்மல போறதுன்னு ஆயிடுச்சு..அப்படியே கொல்லம் பீச்சுல கொஞ்சம் நேரம் காத்து வாங்கிட்டுக் கடல் தண்ணில கால நனைச்சுட்டு கொச்சின் வழியாக் கோயம்புத்தூர் வந்துடலாம்” என்றார்.

     ”கொல்லம் போறதுக்குப் பதிலா தென்மலையில் தங்கிட்டு அச்சன்கோவில் வழியா கவியப் பார்த்துட்டு வரலாம்..ரொம்ப நாளா நம்ம ப்ளான்ல இருக்கு…” என்றேன்.

      ”அதுவும் நல்ல ப்ளான்தான். ஆனா…. கவியையும் பார்த்துட்டு  உடனே திரும்ப முடியாது…..டைம் போதாது…… தேக்கடில தங்கிட்டு அடுத்து நாள்தான் கிளம்பணும்…!“    இது நண்பர் ஆண்டனி.

 

         ”அப்படீன்னா…. கூட ரெண்டு பேரக் கூப்பிட்டுக்கலாம் …!” என்று கூறி அப்பொழுதே அருமை நண்பர்கள் ஆறுமுகத்தையும் வேல்முருகன் அண்ணனையும் கான்காலில் எடுத்தேன்.  சொல்லி முடிக்கும் முன்னரே உற்சாகமாகச் சம்மதித்தனர்.

      கூடவே வேல் அண்ணன்,  ”மதுரை வழியாத்தானெ போறோம்…அப்படியே குட்லாடம்பட்டி  ஃபால்ஸ்ல ஒரு குளியலப் போட்டுட்டுப் போயிடலாம்..” என்றார்.

       கோவையிலிருந்து இரவில் கிளம்புவதால் அதற்கு வாய்ப்பில்லை என்று அண்னனின் ஆர்வத்துக்கு அணைபோட்டுத் தடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

 இப்படித்தான் நண்பர் மட்டும் காலையில் கிளம்பித் தனியாகப் பேருந்தில் சங்கரன்கோவில் போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டு இரவோடிரவாக ஊர் திரும்புவதாக இருந்த ப்ளான், நான்கு பேருடன் மூன்றுநாள் பயணத்திட்டமாக மாறியது.

        புதன்கிழமை நள்ளிரவில் சங்கரன்கோவிலை அடைந்துவிட்டோம். சில்லென்ற ஏ.சி.அறை….அடுத்த மூன்று நாட்கள்  குற்றாலக் குளியல் ,தேன்மல, அச்சன் கோவில், கோன்னி, கவி, தேக்கடி, இடுக்கி என செம ப்ளானை  நினைத்துக் குறுகுறுப்பில் தூக்கமே வரவில்லை.எப்படியோ ஒருவழியாகத் தூங்கிவிடக் காலை ஆறுமணிக்கெல்லாம் அறை ஊழியர் காஃபியுடன் வந்து நின்றார்.

 

    குடித்துக் குளித்து ரெடியாகி அமர்ந்திருக்க, நண்பர் தனது அலுவலை முடித்துவிட்டு நண்பகலில் வந்துவிட்டார். சங்கரன்கோவில் வந்துவிட்டு சுல்தான்கடை பிரியாணியையும் ராஜா கடை ஹல்வாவையும் சாப்பிடாமல் போனால் ஊர்க்குத்தம் ஆகிவிடும் என்பதால் பார்சல் கட்டி எடுத்து வரச்செய்து மதிய உணவை முடித்தோம். பஞ்சு போன்று வெந்திருந்த மிருதுவான இளம் ஆட்டுக்கறித்துண்டுகள் நிரம்பிய ,நெய் தெளித்த பிரியாணிக்குத் தோதாக கத்தரிக்காய் மிதக்கும் தால்சாவும் , விரல்களால் விண்டு எடுக்கக் கொழுக் மொழுக் என வழுக்கி நழுவும் ஹல்வாவும் எங்கள் முன் இலையில் பரத்தியிருக்கச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டோம். சும்மா சொல்லக்கூடாது….அமிர்தமான ருசி.

  பிரியாணி தந்த சுகத்தில் மிதந்து கொண்டே ஒன்றரை மணிநேரத்தில் குற்றாலத்தை அடைந்தோம். ஐந்தருவியில் அப்படி என்ன மாய மந்திரம் இருக்கிறதோ தெரியவில்லை…..குளிக்கக் குளிக்கப் பேரானந்தம் பொங்கி வழிந்தது.ஆஃப் சீசன்..வொர்க்கிங் டே…மதிய நேரம் ….எங்களைத் தவிர யாருமே இல்லாத அருவியில் கொட்டும் நீரில் குளிரக் குளிரக் குளித்தோம்.

 உடைமாற்றிச் சுருக்கென ஒரு இஞ்சித் தேநீரை உறிஞ்சிவிட்டு அடுத்த ஒருமணி நேரத்தில் தென்மலையை அடைந்துவிட்டோம்.

    செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் சாலை இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையில், கல்லடநதி ஒருபுறத்திலும் ரயில் பாதை மறுபுறத்திலுமாகப் பசுமைபொங்க வளைந்து நெளிந்து செல்கிறது. இச்சாலையில் உள்ள பத்துக்கண் பாலம் என்றொரு கம்பீரமான, நீளமான ரயில்வே பாலத்தைத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. தற்போது இது பதின்மூன்று கண் பாலமாக புரமோஷன் வாங்கிவிட்டது. தென்மலையில்  இச்சாலை திருவனந்தபுரத்திற்கும் கொல்லத்துக்கும் செல்ல இரண்டாகப்  பிரிகிறது

.     தென்மல என்பதன் உண்மையான பெயர் தேன்மல என்பதாகும் .தேன் நிறையக் கிடைக்கும் மலை என்பதால் தேன்மலை என்று வழங்கப்பட்டிருக்கும் இவ்விடம் இந்தியாவின் முதல் PLANNED ECO TOURISM CENTER என்று கூறப்படுவதோடு மட்டுமின்றி உலகச் சுற்றுலாக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலியல் சுற்றுலாத் தலங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

 

அடர்ந்த வனச்சூழலில் படகுச்சவாரி

வண்ணத்துப்பூச்சிப் பூங்கா

குழந்தைகள் பூங்கா

மான் பூங்கா

மர விடுதிகள்

Leisure Zone

Adventure Zone

இசைக்கேற்ப அசைந்தாடும் வண்ண நீரூற்றுகள்

“தேனூறும் தேன்மல” என்ற தலைப்பில் தமிழ்,மலையாளம்,ஆங்கில மொழிகளில் ஓர் அற்புதமான சூழலியல் காணொளி நிகழ்ச்சி

தேன்மல அணைக்கட்டு மற்றும் கார்டன்

செந்தூரணி வனவிலங்குச் சரணாலயம் வரையிலான அற்புதமான ட்ரெக்கிங்

அஸ்வினி ,பரணி என 27 நட்சத்திரங்களையும் குறிக்கும்  27 விதமான மரங்களைக் கொண்ட நட்சத்திரவனம்…

எனத் தேன்மலையை அனுபவிக்க இரண்டு முழு நாட்களாவது தேவைப்படும்.

( தேன்மல அனுபவம் பற்றி விரிவாகப் பின்னர் எழுதுகிறேன்.)

 

    இம்முறை இரண்டு மணி நேரம்தான் எங்களிடம் இருந்ததால் தேன்மல அணையின் இடப்புறமாக ஏறி 360 டிகிரிக் காட்சியாக அணையின் நீர்பிடிப்புப் பகுதி,  சூழ்ந்திருந்த மலைத்தொடர்கள், சில்லென்ற க்ளைமேட் ஆகியவற்றை அனுபவித்துவிட்டு வலப்புறமாக இறங்கி விட்டோம்.

 

    பழபஜ்ஜியும் கருந்தேநீரும் இல்லாமல் மலையாள தேசத்து மாலைப்பொழுதுகள் முழுமை அடையாது என்பதால் நால்வரும் சிலப்பல பழம்பொறிகளையும் ,600 மில்லி லிட்டர் கட்டஞ்சாயாவையும் வயிற்றுக்குக் கொடுத்து விட்டு மீண்டும் வண்டியைக் கிளப்பினோம்.

     செங்கோட்டை திரும்பும் வழியில் ஆரியங்காவு என்னுமிடத்தில் எல்லை கடக்கும் முன் வலப்புறத்தில் ஐந்து நிமிடப் பயணத்தில் பாலருவி, ரோஸ்மல என்று அட்டகாசமான பிக்னிக் ஸ்பாட்டுகள் இருக்கின்றன. அந்த இடம் வந்ததும் ”உள்ளே போய்ச் சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வரலாமா…?” எனக் கேட்டேன்.

 

மணி ஆறைத் தாண்டியிருந்தது.

 ”போகலாம்…. ஆனால் ரஹமத் ஹோட்டலில் எல்லா ஐட்டமும் தீர்ந்து போய்விடும்…!” என்று விருந்து கண்களுக்கா …வயிற்றுக்கா…. என டப் சாய்ஸ் கொடுத்தார் நண்பர்.

     கண்களாவது இரண்டு இருக்கின்றன ….வயிறு பாவம் ஒன்றுதான் இருக்கிறது என வயிற்றுக்கு டிக் செய்து வண்டியை நேராக விட்டேன். ரஹமத் பார்டர் கடை வழக்கம்போலப் பரபரப்பாயிருந்தது. தேங்காய் எண்ணெயில் பொரிக்கப்பட்ட கொழுமையான கோழிக்கறியும், சிவப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் சால்னாவில் ஊறிய பரோட்டாவும் சாப்பிட வண்டி கட்டி வருகின்றனர் மக்கள்.  திவ்யமாகக் கழிந்தது இரவுணவு. மதிய நேரம் என்றால்  நாட்டுக் கோழி பிரியாணியும் சேர்ந்து சாப்பிட வாய்த்திருக்கும்.   இந்த ஹோட்டலின் சென்னை மற்றும் கோவைக் கிளைகளில் இச்சுவை இல்லையே ஏன் எனக் கல்லாவில் இருந்தவரிடம் கேட்டேன்…. தண்ணீரின் சுவை தான் காரணம் என்றார்.

    செங்கோட்டையில் புளியரைப்பகுதியில் மலைச்சரிவில் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு இடையில் அமைந்த ரிசார்ட் ஒன்றில் அறை புக் செய்திருந்தோம்.அறையை அடைந்து ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கத் தயாராகிவிட்டோம்.

  அதிகாலை 4:00 மணிக்கு அலாரம் அலறத் தொடங்கியது.

    அரை மணி நேரத்தில் பரபரவெனக் குளித்துப் புறப்பட்டு வண்டியைக் கிளப்பினோம். கும்பாவுருட்டி அருவி –அச்சன்கோவில்- கோன்னி – சித்தாறு-தண்ணித்தோடு-ஆங்கமூழி- பம்பையணை-கவி-வண்டிப்பெரியார்-குமுளி- தேக்கடி… இதுதான் எங்களது அன்றைய பயணத்திட்டம். 16 மணி நேரப் பயணம்… பெரும்பாலும் வனத்துறையிடம் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டிய அடர்வனப் பயணம்.

      ரிசார்ட்டில் இருந்து வெளியேறி, வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பி அதிகாலைக் காற்றின் புத்துணர்ச்சியுடன் மீண்டும் மாநில எல்லையைக் கடக்க அச்சன்கோவில் சாலையில் மாந்தோப்புகளுக்கிடையில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். தென்காசி- செங்கோட்டை -குற்றாலம் பகுதிகளுக்கே உண்டான அதிகாலை டிபனை பண்பொழியில் ருசிப்பது எங்கள் திட்டம். காலை நாலே முக்கால் மணி…ஒரு சிறிய வீடுபோன்ற   கடையின் முன் காரை நிறுத்தி இறங்கினோம்.

 

        சில்லென்ற பனிப்புகை போன்ற குளிர்ந்த காற்று முகத்தைத் தழுவியது. பொலபொலவெனத் தூவக் கூடிய பக்குவத்தில், மணல் மணலாக வெள்ளை ரவை உப்புமாவைத் தாமரை இலையில் வைத்து ஐந்து ரூபாய்க்குத் தருகிறார்கள். வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும்,உட்புறம் மெதுமெதுப்பாகவும் இருந்த உளுந்து வடையும், சுரீரென்ற சூட்டுடன் தேநீரும் சேர்ந்து கொள்ள….அடடா…….!

ஆசீர்வதிக்கப்பட்ட அதிகாலையாக இருந்தது அது…

 

      சற்று நேரத்தில் கும்பாவுருட்டி செக்போஸ்டில் அனுமதி வாங்கி அருவியையும் எல்லையையும்  கடந்து அச்சன்கோவில் வனப்பகுதிக்குள் நுழைந்தோம். ஆளரவமற்ற சாலையில் காலை நேரத்தில் அப்படி ஒரு த்ரில்லான பயணம்.  கோன்னி என்ற நகரத்தை அடைவதற்கு 10 நிமிடங்கள் முன்பு வரை மனித நடமாட்டமே இல்லாமல் இருந்த ஒரு சாலை அது கோன்னி டவுனில் ஒன்பது மணிக்குக் காலை உணவை மெத்துமெதென்ற வெண் அப்பங்களும், காய்கறிகள் அடர்ந்த குருமாவும், ஆம்லெட்டும் கொண்டு உண்டு முடித்து அருகில் இருந்த யானைகள் முகாமைச் சுற்றிப் பார்த்தோம் யானைகளின் வாழ்வு முறையும்   யானைகள் பராமரிக்கப்படும் விதமும்அழகோஅழகு..

      கோன்னியில் உள்ள யானைகள் பயிற்சி முகாம் நீண்ட காலம் தொட்டு இயங்கி வருகிறது. மரத்தாலான கூண்டுகள் இங்கு ஸ்பெஷல்… அதனால் கோன்னியை ”ஆனக் கூடிண்ட நாடு” (யானைக் கூண்டுகளின் நகரம்) என அழைக்கிறார்கள். யானைகளின் வாழ்வு முறையை விவரிக்கும் மியூசியம் ஒன்றை அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவர் நம்முடன் வந்து மியூசியம் முழுவதையும் சுற்றிக் காட்டுகிறார். ஒவ்வொன்றையும் நுணுக்கமாக விளக்குகிறார்.


  யானைகள் முகாமை விட்டு அடுத்து தண்ணித்தோடு, சித்தாறு, சீத்தாத்தோடு என மலைச்சாலையில் ஆங்கமூழியை நோக்கி மீண்டும் பயணம் தொடங்கியது .
சித்தாறை அடையும்முன் புகழ்பெற்ற அடவி வனவிலங்கு சரணாலயம் வருகிறது. நேரமில்லாததால் இம்முறை அடவியை ஸ்கிப் செய்துவிட்டோம். சித்தாற்றுக்கு முன்பாக ஒரு வளைவில் மலைச்சாலை  விளிம்பில் எலுமிச்சைச்சாற்றுடன் நன்னாரி கலந்த சர்பத் ஒன்றை மட்டும் தொண்டைக்கு இதமாகக் குடித்துவிட்டு , நண்பகல் ஒருமணிக்குள் ஆங்கமூழி வன அலுவலகத்தில் அனுமதி வாங்கிவிட வேண்டும் என்பதால் காரைச் சற்று விரட்டிப் பிடித்தேன்.

 

     5 ஐந்து நிமிடங்கள் தாமதித்து இருந்தாலும் அனுமதி கிடைத்து இருக்காது. ரூல்ஸை மிக ஸ்ட்ரிக்டாக ஃபாலோ செய்கிறார்கள். வண்டியை முழுவதுமாகச் சோதனை செய்து ,வண்டியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஒன்று விடாமல் எண்ணி அனுமதிச் சீட்டில் குறித்துத் தருகிறார்கள். அதற்குள் ஆயிரம் கேள்விகள்… அந்த அலுவலகத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது நேர்முகத்தேர்வில் கூட இத்தனை கேள்விகள் கேட்டு இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

 

        ஒரு வழியாக வண்டியைக் கிளப்பி ரிசர்வ் வனப்பகுதிக்குள் நுழைந்தோம். நுழைவாயிலிலேயே செக்போஸ்ட்…. நமது அனுமதிச் சீட்டை வாங்கிப் பார்க்கிறார்கள் ….பிளாஸ்டிக் பொருள்களை எண்ணிச் சரிபார்க்கிறார்கள். ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தைச் சோதிக்கிறார்கள். நெருப்புப் பெட்டி எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்கிறார்கள்.மதுப்புட்டிகள்  இருக்கின்றனவா  எனச் சோதிக்கிறார்கள். எல்லாரையும்  இறங்கச்  சொல்லிச் சோதனை செய்கிறார்கள். அடுத்து மாலை 7 மணிக்கு இந்தக் காட்டை விட்டு வெளியேறும் வரை இடையில் உள்ள எல்லா செக்போஸ்ட்களிலும் இதே நடைமுறைதான்.  ஒரு கட்டத்தில் வண்டியில் உள்ள ஆட்களின் எண்ணிக்கையைச் சரி பார்க்கிறார்களோ இல்லையோ நாங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எதையும் வனப்பகுதிக்குள் போட்டுவிட்டோமா என்பதை அனுமதிச் சீட்டில்  உள்ள எண்ணிக்கையுடன்  பொருத்திப்  பார்த்துக்  கொள்கிறார்கள் எனத்தோன்றியது
    

இந்த செக்போஸ்டில் இருந்து மிக உள்ளடங்கிய வனப்பகுதி தொடங்குகிறது மலைத்தொடர்கள், அடர்ந்த வனம், ஆளரவமற்ற சாலை, என அமைதியாக ஆர்ப்பரிக்கும் அழகு. இடையில் தேவையில்லாமல் எங்கும் வண்டியை நிறுத்தி இறங்கி விடக் கூடாது எனச் சத்தியம் வாங்காத குறையாக எச்சரித்துத்தான் உள்ளே அனுப்பி இருக்கிறார்கள் என்பதால் எங்கும் வண்டியை நாங்கள் இடையில் நிறுத்தவில்லை ரம்மியமான சூழலில் மெய்ம்மறக்கும் பயணம் அது.


     சாலை வளைந்து வளைந்து முன்னேறிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வளைவிலும் ஒரு திகில் பந்து வயிற்றில் இருந்து எழுந்து நெஞ்சு வழியாக தொண்டைக்குழி வரை வந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே போகும்.

     வழியில் ஏதேனும் யானையோ புலியோ வேறு ஏதேனும் விலங்குகளோ நின்று கொண்டிருந்தால் என்ன செய்வது என்ற படபடப்பும் கூடவே வந்து கொண்டிருந்தது.

       சிறிது நேரத்தில் மூழியார் அணைப் பகுதி வந்தது. அணை முகப்பிலேயே இருந்த செக்போஸ்ட் அலுவலகத்திற்கு நான் மட்டும் இறங்கிச் சென்றுநேர்முகத்தேர்வை” முடித்துவிட்டு அங்கிருந்தவர்களிடம் மதிய உணவு பற்றி விசாரித்தேன்.
சரவண பவனில் அமர்ந்து கொண்டு சப்ளையரிடம் வஞ்சிரம் வறுவலும், இறால் தொக்கும் கேட்டால் அவர் என்ன ரியாக்ஷன் கொடுப்பாரோ அது போன்றதொரு ரியாக்ஷனைக் கொடுத்தார் அந்த வனக்காவலர்.


     வாய்ப்பே இல்லை என்றவர் வல்லக்கடவு போனால் பஜ்ஜி, போண்டா, சாயா ஏதாவது கிடைக்கும். அதைவிட்டால் வண்டிப்பெரியார் தான் என்றார். .
அதிர்ச்சியில் உறைந்து திரும்ப எத்தனிக்கையில் அவர் ,” இந்த அணைப்பகுதியின் மறுபுறம் இருக்கும் நீர்மின்நிலைய அலுவலகக் கேன்டீனில் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் என்றார். திரும்பிக் காருக்கு வந்தேன். என்ன சொன்னார்கள் என்று ஆர்வமுடன் கேட்டார்கள் பசியில் இருந்த நண்பர்கள்.

 

வல்லக்கடவு போனால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்…” என்றேன்.

 அப்படியா….. அது இன்னும் எவ்வளவு தூரம்….?” என்று கேட்டார்கள்.

      ”நீங்கள் எல்லாரும் சீட் பெல்ட்டை இறுக்காகப் போட்டுக்கொண்டு கண்களை மூடி அமர்ந்துகொண்டால் மாலை 6 மணிக்குப் போய் விடலாம்…” என்றேன். வேல்முருகன் அண்ணன் தான் மிகவும் சந்தோஷப்பட்டார். காலையிலிருந்தே அவர் மதியம் மீன் வறுவல், மீன்குழம்புடன் ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். நேற்றிலிருந்து இதுவரை எங்குமே நாங்கள் மீன் சாப்பிடவில்லை. . கவி ஒரு பன்னாட்டுச் சுற்றுலாத் தலம் என்று சொல்லி இருந்ததால் வேல்முருகன் அண்ணன்  ஏதோ ஊட்டி, மூணார், கொடைக்கானல் போல நூற்றுக்கணக்கான ஹோட்டல்களும் , உணவகங்களும் இருக்கும் போல என நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். மிகவும் நொந்து போயிருந்த நண்பர்களிடம் மின் உற்பத்தி நிலையக் கேண்டீன் சமாச்சாரத்தைச் சொன்னேன். அணையின் மறு பகுதியில் ஒரு வாய்ப்பு இருக்கிறது வாருங்கள் பார்க்கலாம் என்று ஆறுதல் கூறி அழைத்துச் சென்றேன்



        சிறிது தூரத்தில் அந்த நீர்மின் நிலையம் வந்தது. கேண்டீனில் நாள்தோறும் ஒரு பத்து இருபது பேருக்குச் சமைப்பார்கள் போலிருக்கிறது. அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் அலுவல் நிமித்தமாக அங்கு வருபவர்களைத் தவிரப் பெரும்பாலும் வெளியில் இருந்து யாரும் வந்து இங்கு சாப்பிடுவதற்கு வாய்ப்பில்லை .இந்த வழியில் ஓடும் 3 அரசுப் பேருந்துகள் அல்லது எப்பொழுதாவதுவரும் சுற்றுலாவாசிகள்… இவைதான் வாய்ப்பு.

 

      உணவு தீரப் போகும் நேரத்தில் உள்ளே நுழைந்தோம். மேலும் கீழும் பார்த்துவிட்டு அமர அனுமதித்தார் கடைக்காரர். கடையின் பக்கவாட்டில் எதிரெதிராக அமரக்கூடியபடி மர பெஞ்ச் மற்றும் மேஜைகள் இரண்டு வரிசைகளில் இருந்தன. இலையைப் போட்டு மட்டை அரிசிச் சோற்றைப் பரிமாறினார். மோர்க் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட, அந்த நேரத்தில் அமிர்தமாக இருந்தது. வேறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை வேண்டுமானால் சாப்பிடுங்கள் என்பது போலத்தான் அந்தக் கடைக்காரரின் அணுகுமுறை இருந்தது. நண்பர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். உள்ளறையில் இருந்து முறைத்துப் பார்ப்பது போலச் சைகையால் தண்ணீர் இருக்கும் இடத்தைக் காட்டினார்.. அடுத்து அப்பளம் கேட்க வாயைத் திறக்க இருந்த நான் அப்படியே வாயை மூடிக்கொண்டேன் ரசம். பொரியல் கூட்டு எல்லாம் காலி… அடுத்து நேராக மோர்தான்….. இருந்தாலும், பசியாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லிக்கிளம்பினோம்.

  
    சிறிது தூரத்தில் மூழியாற்றின் ஊடாகக் கடந்து மேலிருந்து கீழாகச் செங்குத்தாக இறங்கும் ராட்சதக் குழாய்கள் பதிக்கப்பட்ட பென்ஸ்டாக் என்ற இடத்தில் நிறுத்தி இறங்கினோம். ஓரிடத்திலிருந்து நீரேற்றம் செய்து மலையின் மறுமுனைக்குக் கொண்டு செல்லும் மிகப்பெரிய திட்டமது. பாதுகாப்பான இடம் என்பதால் அங்கு இறங்கிச் சில செல்பிகளை எடுத்துக் கொண்டிருந்தோம். .

 

      பசுமையைக் கண்களால் மட்டும் அல்ல, அதன் வாசனையை நாசியால் முகரவும் முடிந்தது. சில்லென்ற காற்றைத் தோலால் மட்டுமல்ல, பனி படர்ந்திருந்ததால் கண்களால் பார்க்கவும் முடிந்தது.

காதுகளால் ஆழ்ந்த அமைதியையும் உணரமுடிந்தது அதேநேரத்தில் கானகத்திற்கே உண்டான அற்புதமான இனம்புரியாத  ஒலிகளையும் கேட்க முடிந்தது.. ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு கிலோ மீட்டரையும் ரசித்து அனுபவித்தபடி பயணித்துக் கொண்டிருந்ததில், அந்தப் பகுதியைக் கடவுள் பார்த்துப் பார்த்துப்  படைத்திருப்பது புரிந்தது.

அழகின் ஆழத்தில் லயித்து, வியந்து கிடந்தோம்.
சட்டென மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன வேக வேகமாக நடந்து காரில் ஏறிக்கொண்டு சற்று வேகமாக அடிக்க ஆரம்பித்தவுடன் கைகளை வெளியே நீட்டி உள்ளங்கையைக் குவித்து மழை நீரைப் பிடித்துச் சுவைத்தோம். ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமைந்தது இந்த வாகனப் பயணம்.

 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள” எனும் திருக்குறள் எனக்கு நினைவுக்கு வந்தது.
தெய்வப்புலவன் என்று சும்மாவா சொன்னார்கள் அந்த மனுஷனை…!

      பெருமூச்சுடன் கிளம்பித் தொடர்ந்து பயணிக்கக் கக்கி அணைப்பகுதி கண்ணில் பட ஆரம்பித்தது. அணையை நெருங்கியதும் நிறுத்தி இறங்கி அருகில் சென்றோம். அணையின் விளிம்பில் இருந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே திரும்பி வேல்முருகன் அண்ணனைப் பார்த்தேன் மீன்களை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

          
ஒருவழியாக கவி வனப்பகுதிக்குள் மாலை 5 மணி அளவில் நுழைந்தோம். அலிஸ்டர் இன்டர்நேஷனல் என்ற உலகின் மிகப்பெரிய சுற்றுலாக் கழகம், இந்தியாவில் பார்த்தே ஆக வேண்டிய இடங்களில் ஒன்றாகக் கவியைப் பரிந்துரைக்கிறது. முன்னரே அனுமதி வாங்கி இரண்டு நாட்கள் தங்கி அனுபவிக்க வேண்டிய சூழலியல் சுற்றுலாத் தலம் கவி. சபரிமலைக் காட்சி ,ஏலக்காய் எஸ்டேட்,படகுச்சவாரி,ஜீப் சஃபாரி, ட்ரெக்கிங் ,குடில் வீடுகள் என இரண்டு நாட்கள் வெளியுலகை மறந்து வேறோர் உலகில் இருந்துவிட்டு வரலாம்.

 

       சொக்க வைக்கும் அழகுப் பிரதேசமான கவியை வெளியில் இருந்து பார்ப்பதுதான் இந்த முறை எங்கள் திட்டம். 1970களில் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்காக இங்கு விடுதிகள் அமைக்கப்பட்டு கொடுத்தனர் என்றும் அவர்கள் இங்கு விவசாயம் சார்ந்த தொழிலில் காலங்காலமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று சொல்லக் கேட்டோம்.  

 

    மாலைத் தென்றலில் பொழுது சாய்ந்து கொண்டிருந்த அந்தப் பொன்னான வேளையில் ,சூரியக்கதிர்களின் மஞ்சள் நிறமும்,சுற்றிலும் அடர்ந்திருந்த காட்டு மரங்கள் மற்றும் புல்வெளியின் பசுமையும், வானின் நீர் சுமந்த கருநீலமும் ஊறிக்கொண்டிருந்த ஏரிநீரின் அழகைக் கரையின் மீதிருந்த பாலத்தில் அமர்ந்து அரைமணிநேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கோ தூரத்தில் ஏதேதொ உயிரினங்களின் இனம் புரியாத ஒலிகள் காதில் விழ அந்தக் கணங்கள் இப்பொழுது நினைத்தாலும் கனவு போல்  இருக்கிறது.

 

கிளம்ப மறுத்த மனதை அங்கேயே விட்டுவிட்டு உடலால் மட்டும் கிளம்பினோம்.

 

        சரியாக ஏழு மணிக்கு வல்லக்கடவு செக்போஸ்ட்டில் ரிப்போர்ட்  செய்துவிட்டு வனப்பகுதியை விட்டு வெளியேறினோம். அடுத்த 30 கிலோ மீட்டரையும் மழையின் ஊடாகக் கடந்து காலை நாலரை மணிக்குத் தொடங்கிய இந்த ட்ராவலை இரவு எட்டு மணிக்குத் தேக்கடியில் மலைச்சரிவுகளின்  கீழே இறங்கிய நெடுஞ்சாலையை ஒட்டியே ஒரு ரிசார்ட்டின் மொட்டைமாடியில் காரை பார்க் செய்து முடித்தோம்.  

 

     பின்புறமாகக் கீழிறங்கி அறையை அடைந்த கானத்திலிருதே  .முந்தைய இரவின் போதிய தூக்கமின்மையும், இடைவிடாத பயணமும் சேர்ந்து தூக்கமாக மாறிக் கண்களைச் சுழற்ற ஆரம்பித்தது...
உறங்கத் தயாராகி  ஆர்டர் செய்த டின்னர் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.


       துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட இனிப்பு மிகுந்த அன்னாசிப் பழத்துண்டுகள், இழை இழையாகப் படர்ந்திருந்த கேரளத்துப் பரோட்டாக்கள், வெண்ணையில் பொரித்த கோழிக்கறி வறுவல், மற்றும் மிளகுத்தூள் தூவி ஊற வைத்து வாட்டப்பட்ட கோழி இறைச்சித் துண்டங்களால் வயிறும் , நாள் முழுவதும் கிடைத்த மறக்க முடியாத இனிய பயணத்தால் நெஞ்சமும் நிறைந்திருக்க,
விடியவிடிய வெளியில் சில்லென்று தூறிக் கொண்டிருந்த மழைத் துளிகளின் தாலாட்டிசையில் இன்பமாக உறங்கினோம்….!

 

 

 

Comments

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி