நெடுந்தொடர் மலையின் பேரெழில் நெல்லியம்பதி

நெடுந்தொடர் மலையின் பேரெழில் நெல்லியம்பதி

 

                 ஒரு நாள் வீக் என்ட் பிக்னிக், இரண்டு பகல்கள் ஓர் இரவு தங்கல், குடும்பச்சுற்றுலா, நண்பர்களுடன் ஒரு ஜாலி அவுட்டிங், பைக் ரைடிங் , சோலோ, தேனிலவு என எல்லாவற்றுக்கும் செட்டாகக் கூடிய, ஆனால் அதிகம் அறியப்படாத, அற்புதமான ஒரு மலைவாழிடம் தான் இந்த நெல்லியம்பதி.
              கேரள மாநிலத்தின் பாலக்காட்டு மாவட்டத்தில்,மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நெல்லியம்பதி கோயம்புத்தூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் பொள்ளாச்சியில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது .தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் கோவை அல்லது பொள்ளாச்சியை அடைந்து அங்கிருந்து நெல்லியம்பதி செல்லவேண்டியிருக்கும் .கோயம்புத்தூரில் இருந்து செல்வதாக இருந்தால் வேலந்தாவளம் சென்று, அங்கு மாநில எல்லை கடந்து சித்தூர்-தத்தமங்கலம் கொல்லங்கோடு எனவும், பொள்ளாச்சியிலிருந்து செல்வதாக இருந்தால் பாலக்காட்டுப் பாதை தவிர்த்துத் திருச்சூர்ச் சாலையில் கோவிந்தாபுரத்தில் மாநில எல்லை கடந்து கொல்லங்கோடு எனவும் வந்து அங்கிருந்து திருவிழாவிற்குப் பேர்போன நென்மாற எனும் நகரில் இருந்து இடப்புறம் திரும்பி நெல்லியம்பதிக்கு ரூட் பிடிக்கலாம்.
             நென்மாற செல்லும் வழி, வயலும் தோப்பும்  நீர்நிலைகளும்  சூழ்ந்த மலைத்தொடர் ஓரமாக நம்மை அழைத்துச் செல்கிறது. நென்மாறவில்  இருந்து 8 கிலோமீட்டர் பயணித்தால் மலையடிவாரத்தில் போதுண்டி என்ற அழகான அணைக்கட்டு வருகிறது .மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் கார்டன் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம் குடும்பத்துடன் பிக்னிக் செல்ல மிக அருமையான இடம் .அணையின் மீது ஏறி நாலாப்புறமும் இயற்கையின் அழகை ரசிக்கலாம். குழந்தைகள் விளையாடவும், பெரியவர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும் தோதான  இப்பூங்காவினுள் நொறுக்குத்தீனி ,தேநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்கும்  ஓர் அங்காடி உள்ளது. வெளியே சிறு குடில்களில் உணவகங்களும் கடைகளும் உள்ளன ஒரு ஆம்னி வேனில் பார்சல் செய்து 100 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த பிரியாணி அதிருசியாக இருந்தது.
               போதுண்டி அணையின் மறு புறத்தில் இருந்து  நெல்லியாம்பதி செல்லும்  மலைப்பாதை தொடங்குகிறது . மலைப்பாதை தொடங்கும் இடத்தில் உள்ள செக்போஸ்டில் நம்மை விசாரித்து அனுப்புகிறார்கள். ஒருநாள் பயணம் எனில்  மாலை 4 மணிக்குத் திரும்பிக் கீழே இறங்கி விடுமாறு அறிவுறுத்துகிறார்கள். ஊட்டி ,மூணார்,கொடைக்கானல் , வால்பாறை போல் அல்லாமல் நெல்லியம்பதிக்கு ஏறவும் இறங்கவும் இந்த ஒரே  ரூட்தான்.
                  மலைப்பாதையில் பயணிக்கத் துவங்கியதிலிருந்து   போதுண்டி அணைக்காட்சி  வழி நெடுக நமக்கு அழகாகக்  கிடைக்கிறது .மிகக்குறுகிய கடினமான வளைவுகள் இல்லை எனினும் சற்றுக் கவனத்துடனேயே வாகனத்தை ஓட்ட வேண்டிய மலைச்சாலை இது . டூ வீலர்ஸ் பேரடைஸ் எனச் சொல்லுமளவு அதிக அளவு பைக் பிரியர்கள் விரும்புகின்ற இடம் நெல்லியம்பதி .குட்டி குட்டியாக க்யூட்டான அருவிகளும், ஓடைகளும் நம்முடன் வந்து கொண்டே இருக்கின்றன.
                மலைப்பாதை தொடங்கியதுமே இயற்கை மோடுக்கு  மாறிக்கொள்வது இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சியைத் தரும். வெளியே சிலுசிலுக்கும் குளிர்காற்று, பறவைகள்‌, சிறுசிறு உயிரினங்கள்,தாவரங்கள் அசையும் ஒலிகள்,மலைப்பகுதிக்கே உரிய  நறுமணம் ஆகியவற்றோடு ஒன்றிவிடலாம்.
                மலைச்சாலையில்  எந்த ஆங்கிளில் திரும்பினாலும் 360 டிகிரியில் நமக்கு போஸ்ட் கார்ட் பிக்சராகக் கண்களில் அழகான காட்சிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன. செல்ஃபி எடுக்க வண்டியை நீங்கள் குறிப்பிட்டு எந்த ஓர் இடத்திலும் நிறுத்தத் தேவையில்லை .நிறுத்துவதற்கு வாகாக உள்ள எந்த ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தினாலும் அது செல்ஃபி எடுக்க ஆகச்சிறந்த இடமாகத்தான் இருக்குமாறு வழிநெடுக செல்ஃபி ஸ்பாட்டுகள்தான்.
                 குன்றச்சோலைப் பாலம் அகலமான ஒரு வளைவில்ஒருபுறம் உயரத்தி லிருந்து கொட்டும் அருவியையும் ,மறுபுறத்தில் போதுண்டி அணைக்காட்சியையும் கொண்டு நம் காலை பிரேக்கை அழுத்த வைக்கிறது .அடுத்துச் சில நிமிடங்களில் லோயர் டெக் ,மிடில் டெக் ,அப்பர் டெக் என வியூபாயின்டுகள் வரிசைகட்டி வருகின்றன.மிடில் டெக்கில் ஒரு நிழற்குடை  இருக்கிறது.நல்ல அகலமான சாலையாதலால் நிறைய வாகனங்கள் நிற்கின்றன .ஆழமான பள்ளத்தாக்கு அற்புதமாக இருக்கிறது .முன்பு அந்த நிழற்குடையுள் ஒரு தேநீர்க்கடை இருந்தது.மழைச்சாரலில் இறங்கி வேகவேகமாக நிழற்குடைக்குள் தஞ்சம் புகுந்து ,பச்சை மிளகாய்த்துண்டுகள் பொதிந்த பிரெட் ஆம்லெட்டுடன் சூடு பறக்கும் கருந்தேநீரைப் பருகிய படியே பள்ளத்தாக்கினைப் பார்க்கும் அனுபவம் வாய்க்கப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள். அடியேனுக்கு மூன்று நான்கு முறை அந்த அனுபவம் வாய்த்திருக்கிறது .
                 நெல்லியம்பதிக்குள் நுழையும் முன் கைகாட்டி எனும் இடத்தில் சாலை இரண்டாகப் பிரிகிறது .வலப்புறம் திரும்பினால் கேசவன் பாற, காரப்பாற,பாடகிரி,பக்குத்தி பாலம் போன்ற இடங்களுக்கும் , இடப்புறம் திரும்பினால் சீத்தார் குண்டு, மின்னாம்பாற, மாம்பாற, புளியம்பாற போன்ற இடங்களுக்கும் செல்லலாம். காரப்பாறை செல்பவர்கள் அருவியையும், ஆற்றையும், தொங்கும் பாலத்தையும் கண்டு ரசிக்கலாம். கைகாட்டியில் இருந்து நூறடி எனும் இடத்தை அடைந்தபின் அங்கிருந்து மிகக் குறுகலான பாதையில் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும். டிரைவிங்கில் அனுபவம் குறைந்தவர்கள் இச்சாலையில் செல்வதைத் தவிர்த்து விடுதல் நலம். நூறடியில் இருந்து இடப்புறம் திரும்பி உள்ளே செல்லச் செல்லப் பாதை  நீண்டு கொண்டே போகும் . உள்ளடங்கிய ,ரசனையான ரிசார்ட்டுகள்  உள்ள பகுதி இது .
                 கைகாட்டியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கேசவன் பாற வருகிறது .நமது வாகனத்தை பார்க் செய்துவிட்டு மலை உச்சி வரை நடந்துசென்று பார்க்கும் பொழுது நாலாப்புறமும் சொக்க வைக்கும் பேரழகைக் காணலாம்.போதுண்டி அணையின் காட்சி இங்கிருந்து காணும்பொழுது ஓர் ஓவியம் போல் கண்களுக்குள் விரிகிறது.மாலை வேளைகளில் மலை உச்சியில் தட்டையான இடங்களில் அமர்ந்து மாலைத் தென்றலைஅனுபவிப்பது சுகமான ஒன்று.
                    கைகாட்டியில் இருந்து இடப்புறமாகச் சென்றால் புளியம்பாற என்னும் இடம் வருகிறது.இவ்விடத்தைப் பூர்விக நெல்லியம்பதி மக்கள் கொலியம்பாற எனப் பேச்சு வழக்கில் சொல்கிறார்கள். இங்கிருந்து சீதார்குண்டு என்ற வியூ பாயின்ட் செல்லலாம்.போப்ஸ் எஸ்டேட் வரை நமது வாகனத்தில் சென்று அங்கிருந்து நடந்து இந்த வியூ பாயிண்ட்டை அடையலாம் .ராமபிரான் சீதையுடன் இலங்கையிலிருந்து வரும் வழியில் ஓய்வெடுத்த இடம் என இது நம்பப்படுவதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. அழகான ஆபத்து நிறைந்த இந்த இடத்தில் மலையின் விளிம்பில் இருந்து பார்க்கும் பொழுது பாலக்காட்டு மாவட்டத்தின் பசுமை கொஞ்சும்  சமவெளிப்பகுதி மலையடிவாரத்தில்  நமது கண்களுக்கு விருந்தாக விரிகிறது .மிகக் கவனமாக  இருக்கவேண்டிய இவ்விடத்தில் அண்மையில் கூடப் பாலக்காட்டில் இருந்து வந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கால் தவறிப் பள்ளத்தாக்கில் விழுந்து இறந்து போயிருக்கிறார்கள் .மலை விளைபொருட்கள் விற்கும் அங்காடி ஒன்று இங்கு இருக்கிறது. பர்சேஸ் செய்யவும் ரெஃப்ரெஷ் செய்யவும்  மிக அருமையான இடம் இது. இங்கு கிடைக்கும் இஞ்சிச்சாற்றை மிஸ் செய்து விடாதீர்கள்...!
                  சீதார்குண்டு வியூ பாயிண்டிலிருந்து நாம் திரும்பி வரும்போது வளைவு ஒன்றில்பெண்கள் நடத்தும்  இன்ஸ்டன்ட் லஞ்ச் கடைகள் நான்கைந்து ப்ளாஸ்டிக் நாற்காலி- மேஜைகளுடன் முளைத்திருந்தன.வீட்டில் செய்து எடுத்து வந்திருந்த பிரியாணியை செராமிக்  தட்டில் நிரப்பித் தருகிறார்கள். நடந்து திரிந்த களைப்பிலும், மெல்லிய குளிரிலும் பசி கனன்று கொண்டிருந்த அந்த வேளையில் மசாலாவில் தோய்த்து நன்கு வெந்திருந்த   கோழிக்கறித் துண்டுகள் நிரம்பிய கேரளத்து வெண்  பிரியாணி , சுள்ளென்ற எலுமிச்சை ஊறுகாயுடனும் ,நறுக்கிய வெங்காயப் பச்சடியுடனும்   சாலையோரமாக மரங்களின் அடியில் வயிற்றுக்கும் நாவின் சுவையரும்புகளுக்கும்  இதமாக, நிறைவாக இருந்தது .
                       புளியம் பாறையிலிருந்து சீதார்குண்டு செல்லும் வழியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்திலிருந்து வலப்புறமாகச் சென்றால் நெல்லியம்பதியின் ஹைலைட் எனச் சொல்லக்கூடிய மின்னாம்பாறையையும் காரா சூரியையும் அடையலாம்.ஆனால் இங்கு செல்ல நமது வாகனங்களுக்கு அனுமதியும் இல்லை... நமது வாகனங்கள் செல்லக்கூடிய விதத்தில் அந்தச் சாலையும் இல்லை.
                   நெல்லியாம்பதி முழுக்க ஏறத்தாழ 100 ஃபோர் வீல் ட்ரைவ்  ஜீப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு  இவ்விடங்களுக்குச் செல்லலாம். ஐந்து பேர் பயணிக்க 1500 ரூபாய் கட்டணமாகக் கேட்கிறார்கள். ஜீப் சஃபாரி களிலேயே இந்த ஜீப் சஃபாரி என்னால் வாழ்நாளில் மறக்க முடியாது. மெயின் ரோட்டிலிருந்து திரும்பி இரண்டு கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் பயணித்த பிறகு வனத்துறை அலுவலகம் வருகிறது. அங்கு கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று செக்போஸ்ட் தாண்டினால் அடுத்த மூன்றரை மணி நேரத்துக்கு கொண்டாட்டத்துக்கும் த்ரில்லுக்கும் குறைவில்லை.
                        நீங்கள் இயற்கைப் பிரியர்கள் எனில் இந்தப்  பயணத்தையும் இங்கு கிடைக்கும் பேரின்பத்தையும் நினைத்து நினைத்துப் புளகாங்கிதம் அடைவீர்கள் .கண்முன்னால் சாலை என்று ஒன்றுமே தெரியாத இடத்தில் தான் நமது ஜீப் சென்றுகொண்டிருக்கும். இத்தோடு பாதை  முடிந்து விட்டது இனித் தொடர்ந்து  செல்ல முடியாது என நாம் நினைக்கும் இடங்களில் எல்லாம் ஜீப் சர்வ சாதாரணமாக கடந்து செல்வது திரில்லிங்கின்  உச்சகட்டம்.
                        கரடுமுரடான சாலையில் தொடர்ந்து ஜீப் முன்னேறிக் கொண்டிருக்க  சடாரென இடப்புறம் திருப்பி வண்டியை நிறுத்தி இறக்கி விடுகிறார்கள் .அற்புதமான வியூ பாயின்ட் ஒன்றைல்  இறங்கிச் சற்றுத் திரும்பிப் பார்க்கிறீர்கள். இயற்கையின் பிரம்மாண்டத்தில் தொலைந்து போகிறீர்கள் . இந்தப் பயணத்தில் இதுதான் உச்சம் என நினைக்கிறீர்கள் .‌ குளிர்ந்த காற்றையும் மெல்லிய பனிப்புகையயும் உள்வாங்கி ஆனந்தமாக அனுபவக்கிறீர்கள்.அழகின் பிரும்மாண்டத்தில் திளைத்து ஆழ்கையில்  அடுத்த இடத்துக்கு மீண்டும் ஜீப்பில் அழைத்துப் போகிறார்கள். 30 நிமிடம் மீண்டும் சாலையல்லாத சாலையில் ,பாதையல்லாத பாதையில் பயணித்து அடுத்து ஓர் இடத்தில் இறக்கி விடப்படுகிறீர்கள் .இறங்கி நடக்கிறீர்கள்..... கால் போன பாதையில் செல்கிறீர்கள்...   அழகின் உச்சம்  என்றால்  என்ன  எனத் தெரிந்து கொள்கிறீர்கள்.  ஏன் இவ்வளவு நாட்களாக நாம்  இப்படி ஒரு இடத்தை மிஸ்  செய்தோம் என வருத்தப்படத் தொடங்குகிறீர்கள். செல்போனை எடுத்து செல்ஃபிகளும், வீடியோக்களும் ,பனோரமாப் படங்களுமாக எடுத்துத்  தள்ளுகிறீர்கள் .அதுவும் நீங்கள் சென்றிருப்பது பருவமழை முடிந்த காலம் என்றால் அங்கு கிடைக்கும் சிலுசிலுப்பும், பசுமைச்செறிவும், பனிச்சாரலும், மலை முகடுகளும் உங்களில்  ஏற்படுத்தும் அதிர்வுகள் மிகப் புதிதென உணர்வீர்கள்.
                             பொள்ளாச்சி- திருச்சூர் நெடுஞ்சாலையில் இருந்து விலகி, எட்டு கிலோமீட்டர் பயணித்து, அங்கிருந்து  மலைப்பாதையில் 22 கிலோமீட்டர் பயணித்து, பிறகு  ஜீப் ஒன்றை வாடகைக்கு எடுத்து , ஒன்றரை மணிநேரம் அடர்ந்த வனத்துக்குள் மலைமீது சாலையே இல்லாத இடத்தில் பயணித்து, அங்கிருந்து பத்து நிமிடம் நடந்து ஆள் அரவமற்ற மலை உச்சியில் பள்ளத்தாக்குகளும், நெடும் மலைத்தொடர்களும், ஆறுகளும், அருவிகளும், பனியும் ,மேகமும் அரிய பல நூறு உயிரினங்களும் அடர்வனமும் சூழ நிற்கும் போது ஏற்படும் பேரின்பம் எல்லை இல்லாதது.
                        கிழக்குப் பக்கமாக நம் முன்னால் பரந்து விரிந்த மலைத்தொடர்களில் தான் தமிழகத்தின் டாப் ஸ்லிப் பகுதியும்  கேரளத்தின் பரம்பிக்குளம் பகுதியும்  இருக்கின்றன.  கண் முன்னால் தெரிகின்ற இவ்விடங்களுக்கு  நாம் சாலை வழியாகச் செல்ல வேண்டுமென்றால் நெல்லியாம்பதி, நென்மாற, கொல்லங்கோடு,முதலமட, வேட்டைக்காரன்புதூர் ,சேத்துமடை, டாப்ஸ்லிப் என மலைச்சாலையிலும், சமவெளியிலும் மீண்டும் மலைச் சாலையிலும் ஏறத்தாழ 100 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால் இங்குள்ள பழங்குடி மக்கள் மலைத் தொடர்களின் ஊடாகப்  புகுந்து இருபத்து நான்கு மணிநேரத்தில் பரம்பிக்குளத்தை அடைந்து திரும்புகிறார்கள் என இங்குள்ளவர்கள் சொல்லக் கேட்கும்பொழுது வியப்பாக இருக்கிறது.
                    இதற்கப்புறமும் இங்கிருந்து 15 நிமிடம்இன்னும் உள்ளே சென்றால்  ஒரு ரிசார்ட்  வரும் என்று சொன்னால் மலைத்துப் போய் விடுவோம் . அங்கு   தங்கி அனுபவித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் .முன்பே புக்கிங் செய்வது அவசியம் .
                    இயற்கையில் திளைத்து விட்டு வர நெல்லியாம்பதி செல்லும்முன் சில டிப்ஸ்கள் ....
           #ஒரு நாள் பிக்னிக் எனில் அதிகாலையிலேயே கிளம்பி விடுவது நல்லது.

 

            #எரிபொருள் ( டீசல் , பெட்ரோல்) நென்மாறவிலேயே  நிரப்பிக் கொள்வது நலம் .எனக்குத் தெரிந்து இங்கு எரிபொருள் கிடைப்பது கடினம்.

 

           #காரப்பாற செல்பவர்கள் கைகாட்டியில் இருந்து நூறடி என்னும் இடம் தாண்டினால் மிகக் குறுகிய பாதையில் 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருக்கும் .டிரைவிங்கில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் கட்டாயம் தவிர்த்து விடவும் .

 

          #நெல்லியம்பதிப் பயணத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் என்றால் ஏதாவது ரிசார்ட்டில்  தங்கி விடுதல் நல்லது அல்லது அதற்கு முன்பே கீழே இறங்கி விடத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

 

                         இங்குள்ள எல்லா இடங்களுக்கும் சுற்றிப்பார்க்க  எப்போதும் அனுமதி இருக்கும் எனச் சொல்ல முடியாது .காட்டு விலங்குகள் நடமாட்டம் ,நிலச்சரிவு ,வெள்ளம், ,கானுயிர்ப் பாதுகாப்பு,கவனக்குறைவால் உயிரிழப்பு போன்ற காரணங்களால் அவ்வப்போது சில இடங்களுக்கு அனுமதி கிடைப்பது இல்லை .மாம்பாற என்னும் பிரமிப்பூட்டும் இடத்துக்கு நீண்ட காலமாகவே சூழலியல் காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது .
                     ப்ளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு ,நெருப்புப் பொறித் தவிர்ப்பு,நீர்நிலைகள் ,மலைச்சரிவுகள் போன்ற இடங்களில் கவனம் ,வனவிலங்குகட்கு இடையூறு செய்யாமை ஆகியவற்றை மனதில் இருத்தி , நெல்லியாம்பதியை நெஞ்சில் நிறைத்து வர இனிய பயண வாழ்த்துகள்.....!
நன்றி:
உடன் வந்து பயணத்தை இனிமையாக்கிய  நண்பர்கள் திரு.கணேசன் ,திரு.முகம்மது ரஃபி ,திரு.வேல்முருகன் ஆகியோருக்கு.

















 

Comments

  1. அழகை, இயற்கைஅன்னையை போற்றி, வணங்கினால் மட்டுமே, இப்படி எழுதமுடியும், "அருவி, போத்துண்டி அழகைப்பார்த்து ,பிரேக்கை அமுக்கவேண்டிய சூழலை படம் பிடித்துகாட்டியிருக்கிறாய் தம்பி.இன்றும் காராசூரி, மின்னாம்பாற, காரப்பாற போய் வந்த மகிழ்ச்சியை, நெஞ்சத்தில் தஞ்சம் அடையச்செய்துவிட்டாய்,..நன்றி & நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி